கொலை வழக்கில் சிக்கி தலைமறைவான 'ஆன்டி வைரஸ்' மெக்காபீ!

அமெரிக்காரான மெக்காபீ, பெலிஸ் நாட்டில் உள்ள ஆம்பர்கிரீஸ் கே என்ற தீவில் ரிசார்ட்டில் தங்கியிருக்கிறார். அதே ரிசார்ட்டில் தங்கியிருந்த கிரெகரி பால் என்ற இன்னொரு அமெரிக்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொலையானார். இதையடுத்து போலீஸார் அந்த ரிசார்ட்டுக்கு விரைந்து வந்தனர். ஆனால் மெக்காபீ அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மெக்காபீ தங்கியிருந்த ரிசார்ட்டை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். மெக்காபீ மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ரிசார்ட்டில் சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது மெக்காபீயின் அறையிலிருந்து போதைப் பொருள், ஆயுதம் உள்ளிட்டவை சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் மெக்காபீயும் பலமணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
மெக்காபீ கடந்த நான்கு வருடங்களாக இந்தத் தீவில்தான் வசித்து வருகிறார். இந்தத் தீவில் அமெரிக்கர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு ஸ்கூபா டைவிங், மீன்பிடி உள்ளிட்டவை பிரபலமானது. இங்குள்ள ரிசார்ட்டில் வசித்து வந்த மெக்காபீக்கும், கொலையான கிரெகரிக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக அங்கு வசித்து வருவோர் கூறுகிறார்கள்.
மேலும் சமீப காலமாக மன நல மருந்துகளை மெக்காபீ எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் அமெரிக்கராக இருந்தாலும் கூட சக அமெரிக்கர்களுடன் அவ்வளவாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லையாம். விலகியே வாழ்ந்து வந்துள்ளார் என்று தெரிகிறது.
67 வயதான மெக்காபீ, தனது ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை 90களின் தொடக்கத்திலேயே விற்று விட்டார் என்பதும், அதன் மூலம் அவர் பல கோடி பணத்தை சம்பாதித்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
தற்போது மெக்காபீயை பெலிஸ் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications