2ஜி ஸ்பெக்ட்ரம்... உண்மையிலேயே ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்ததா சிஏஜி?

Subscribe to Oneindia Tamil

Vinod rai
டெல்லி: ரூ. 30,000 கோடிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்க ஏலத்தில் இறங்கிய மத்திய அரசுக்கு கிடைத்திருப்பது வெறும் ரூ. 9,400 கோடி தான்.

இதன்மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது. அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்று இல்லாமல் ஏலம் மூலம் விற்றிருந்தால் ரூ. 1.76 லட்சம் கோடி வருமானம் கிடைத்திருக்கும் என்று மத்திய கணக்குத் தணிக்கையாளரான சிஏஜி கூறியது மிகப் பெரியது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது.

லஞ்சம் வாங்கிக் கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரத்தை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அள்ளித் தந்ததால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக ஒரு உத்தேசமான கணக்கை வெளியிட்டார் சிஏஜியான வினோத் ராய். இதையடுத்து ராசா உள்ளிட்ட பல தலைகள் உருண்டன.

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் ஊழலாக ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராசா வழங்கிய லைசென்ஸ்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, அவை புதிதாக ஏலம் விடப்பட்டன.

ஏலத்துக்கு அடிப்படைத் தொகையாக மிக அதிகமான தொகையும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னாளில் தங்களையும் ஊழல்வாதிகள் என்று கூறிவிடக் கூடாது என்று கருதிய டிராய் அதிகாரிகள், இதற்கு மிக மிக அதிகமான விலையை நிர்ணயித்தனர்.

இந்த விலையுடன் ஏலம் தொடங்கியது. இதன்மூலம் குறைந்தது ரூ. 30,000 கோடியாவது மத்திய அரசுக்கு வருமானம் வரும், பட்ஜெட்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையைக் கூட சமாளித்துவிடலாம் என்று நிதியமைச்சக அதிகாரிகள் பணத்தை எண்ண காத்திருந்தனர்.

ஆனால், இந்த ஏலத்தால் இதுவரை அரசுக்குக் கிடைத்திருக்கும் பணம் ரூ. 9.400 கோடி மட்டுமே. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் சிஏஜி சொன்ன ரூ. 1.76 லட்சம் கோடி என்பது எவ்வளவு தூரம் ஏற்றிச் சொல்லப்பட்ட பணம் என்பது தெளிவாகிறது.

ஏலத்துக்கு வந்த 2ஜி ஸ்பெக்ட்ரத்தில் பாதி கூட வாங்கப்படவில்லை. காரணம், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட மிக மிக அதிகமான விலை தான்.

சரியான விலையை நிர்ணயித்திருந்தால் அதை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டிருக்கும். நிறைய நிறுவனங்கள் களத்தில் குதித்திருந்தால் மக்களுக்குத் தான் லாபம் ஏற்பட்டிருக்கும். போட்டி போட்டுக் கொண்டு செல்போன் கட்டணத்தைக் குறைத்திருப்பார்கள். ஆனால், இப்போது நடந்தது என்ன?

ஸ்பெக்ட்ரத்தை வாங்க ஆளில்லாமல் போனதால் இப்போதுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிர்ணயிப்பதே கட்டணம் என்று ஆகிவிட்டது.

3ஜி ஸ்பெக்ட்ரம் என்பது மிக மிக குறைவாக உள்ள அலைவரிசை ஆகும். இதனால் அதற்கு மிக அதிகமான விலை வைத்தாலும் கூட வாங்க போட்டி இருந்தது. ஆனால், 2ஜி கதை அதுவல்ல. மிகையாகவே உள்ள இந்த ஸ்பெக்ட்ரத்தை யாரும் மாபெரும் விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை.

ஆனால், 3ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்ட விலையை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கு ராசா அண்ட் கோ நிர்ணயித்த விலை மிக மிகக் குறைவு என்று சிஏஜி பிரச்சனை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சொல்வதால் ராசா தப்பு செய்யவில்லை என்று சொல்வதாக நினைக்கக் கூடாது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை விற்கும்போது முதலில் வருவோருக்கு முதலில் என்ற லிஸ்ட்டை தயாரிப்பதிலேயே தில்லாலங்கடி வேலை செய்தார் ராசா. தனக்கு வேண்டிய நிறுவனங்கள் அந்த லிஸ்டில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக விதிகளைத் திருத்தி, சில தவறுகளை அவர் செய்தார்.

ஆனால், இதனால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் வந்துவிட்டதாக யாரும் சொல்ல முடியாது என்பதே உண்மை என்பதை இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் கிடைத்துள்ள தொகை தெளிவாகவே காட்டிவிட்டது.

பொருளாதார விஷயங்களையோ, வர்த்தக விவகாரங்களையோ, தொழில்ரீதியிலான விஷயங்களையோ மனதில் கொள்ளாமல் உத்தேசமாக ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்துவிட்டதாகச் சொல்லி மக்களை குழப்பி, மத்திய அரசையும் செயல்படாத நிலைக்குத் தள்ளிவிட்டது சிஏஜி என்பதே உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+