தோசை சுட்டுத் தர மறுத்த நிறை மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்
சென்னை: சென்னையில் தோசை சுட்டுத் தர மறுத்த நிறை மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சீனி(25). அவருக்கும் கீதா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கீதா தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். சீனி சென்னை மேடவாக்கம் வடக்கு பட்டு சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த சீனி தனக்கு தோசை சுட்டுக் கொடுக்குமாறு மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் கீதா தோசை சுட்டுக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சீனி தனது மனைவியை கழுத்தை நெரித்துள்ளார். இதில் கீதா மயங்கி விழுந்துள்ளார். அதைப் பார்த்த அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
மயங்கிய கீதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள சீனியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications