குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க அனுமதி மறுத்த பள்ளி... வழக்குப் போட்டார் ஆசிரியை
கலிபோர்னியா: குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க நேரம் ஒதுக்காததாலும், தாய்ப்பால் கொடுக்கக் கூடாது, என்று கூறி அசிங்கமாகப் பேசிய பள்ளி நிர்வாகி மீதும் வழக்குத் தொடுத்துள்ளார் அமெரிக்க பள்ளி ஆசிரியை ஒருவர்.
தாய்ப்பால் கொடுப்பதை எதிர்த்து அந்த ஆசிரியையை பள்ளி நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியதைத் தொடர்ந்து வழக்குத் தொடுத்துள்ளார் அந்த ஆசிரியை.
தெற்கு கலிபோர்னியாவின் பசிபிக் குரோவ் பகுதியைச் சேர்ந்தவர் சாரா ஆன் லூயிஸ் பாயில். இவர் ஒரு ஆசிரியை. அப்பகுதியில் உள்ள கார்மலோ ஸ்கூல் என்ற பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் பள்ளியிலிருந்து திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து தற்போது பள்ளி நிர்வாகம் மீதும் மாவட்ட கல்வித்துறை மீதும் வழக்குப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
நான் மகப்பேறு விடுமுறை முடிந்து பள்ளிக்குப் பணிக்குத் திரும்பினேன். எனக்குப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க நேரம் ஒதுக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தேன். தினசரி காலை 9 மணி முதல் 11 மணிக்குட்பட்ட நேரத்தில் கால் மணி நேரம் தாய்ப்பால் தர நேரம் தருமாறு கோரியிருந்தேன். ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி தர மறுத்தது.
அத்தோடு நில்லாமல், பள்ளியின் பெண் மேலாளர் லாரா டூன் என்பவரும், எனது மார்புகளை அடக்கி வைக்குமாறு அசிங்கமாகப் பேசி அவதூறு செய்தார். அத்தோடு இருக்காமல், பள்ளிக்கு வந்த பிறகு தாய்ப்பாலை கொடுப்பதற்குப் பதில் வீட்டிலேயே தாய்ப்பாலை பீய்ச்சி எடுத்து அதை பள்ளிக்குப் பாட்டிலில் கொண்டு வருமாறும் பேசினார். மாவட்ட கல்வித்துறையும், மாகாண மனித உரிமைப் பிரிவும் எனக்கு உதவ முன்வரவில்லை.
இந்த செய்கையானது எனது குழந்தையை பட்டினியில் தவிக்க விடுவதற்குச் சமமானது. தற்போது என்னை சட்டவிரோதமாக பணியிலிருந்து நீக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார் சாரா.












Click it and Unblock the Notifications