மண்ணின் மைந்தர் கோஷத்தை கடைசிவரை கைவிடாத பால்தாக்கரே…!
மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற முழக்கத்தை கடைசி வரை கடைபிடித்த பால்தாக்கரே இன்று மரணமடைந்தார். 50 ஆண்டுகாலம் சிவசேனா கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்த பால்தாக்கரே ஆட்சியை கைப்பற்றிய போதும் பின்னணியில் இருந்தே அரசியல் செய்தவர். இவரது மண்ணின் மைந்தர் கோஷத்தை பிடிக்காதவர்கள் பலர் இருந்தாலும் இவருக்கு எதிராக செயல்பட முடியாமல் கடைசியில் இவரிடமே சரணடைந்துவிட்டனர் என்பதுதான் உண்மை.

இந்துக்களின் இதயத்தை ஆளும் பேரரசர்
பால் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பாலா சாஹேப் கேசவ் தாக்கரே 1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் புனேயில் பிறந்தார். இவருடைய தொண்டர்கள்.இந்துக்களின் இதயத்தை ஆளும் பேரரசர் என்று அபிமானத்துடன் அழைக்கின்றனர். கடந்த அரை நூற்றாண்டுகாலமாக இந்தியாவின் மேற்கு மண்டலமான மராட்டியத்தை தனது கைக்குள் வைத்திருந்தார் பால் தாக்கரே என்கின்றனர் இவரைப் பற்றி அறிந்தவர்கள்.

மண்ணின் மைந்தர்களுக்கு உரிமை
மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களுக்கு உரிமைகளும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். இதற்காகவே 1966 ம் ஆண்டு சிவசேனா என்ற கட்சியை தொடங்கினார்.

வேறு மாநிலத்தவர்களுக்கு எதிர்ப்பு
மும்பையில் குடியேறிய குஜராத்திகள், வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் அனைவரும் மராட்டியர்களின் வேலை வாய்ப்பு, உரிமைகளை பறித்துக்கொண்டனர் என்பது இவரது குற்றச்சாட்டாக இருந்தது. மராட்டியர்கள் தவிர மும்பையை யார் உரிமை கொண்டாடினாலும் அவர்களை தாக்கி எழுதியும், பேசியும் வந்தார் தாக்கரே.

ஆட்சியின் சூத்திரதாரி
1995ல் பாஜக கூட்டணியுடன் ஆட்சியை கைப்பற்றினாலும் முதல்வர் பதவியில் அமராமல் பின்னால் இருந்து சூத்திரதாரியாக செயல்பட்டார் தாக்கரே. இதனால் அவரை "தொலைவிலிருந்து இயக்குபவர்" என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர்.

40 ஆண்டுகால நண்பர் அமிதாப் பச்சன்
உத்ரபிரதேசத்தில் பிறந்தாலும் மும்பையில் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருபவர் அமிதாப் பச்சன். தாக்கரேயிடம் நட்பு பாராட்டி வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த மிகச்சிலரில் அமிதாப் பச்சனும் ஒருவர். சில ஆண்டுகளுக்கு முன் பால் தாக்கரேவின் மருமகனும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனை கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரே, அமிதாப் பச்சனை தாக்கிப் பேசினார். அமிதாப் பச்சனின் வீடும் தாக்கப்பட்டது. அப்போது அமிதாப் பச்சனுக்கு ஆதரவாக பால் தாக்கரே குரல் கொடுத்தார்.

சச்சின் டெண்டுகருக்கு எதிர் பேட்டி…
சச்சின் டெண்டுல்கர் 2009ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் மும்பை இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறினார். இந்த கருத்தை ஒத்துக்கொள்ளாத தாக்கரே, மும்பை இந்தியாவுக்கு சொந்தம் என்று கூறுவதை என்னால் பொறுத்துக் கொள்ளவும் மாட்டேன். அப்படி சொல்வதை மன்னிக்கவும் மாட்டேன் என்று பதிலுக்கு பேட்டியளித்தார்.

ஷாருக்கானின் மை நேம் இஸ் கான்…
இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருபோதும் தாக்கரே கைவிட்டதில்லை. 2010ம் ஆண்டு ஷாருக்கானின் ‘மை நேம் இஸ் கான்' படத்திற்கு எதிராக கருத்து கூறிய தாக்கரே, ஷாருக்கானை துரோகி என்று வர்ணித்தார்.

தாக்கரே ஒரு போராளி: அமிதாப்
தாக்கரே உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அவரை பார்த்துவிட்டு வந்த அமிதாப் பச்சன் பால்தாக்கரே ஒரு போராளி என்றும் அவருடைய உடல் நலம் குணமடைய பிரார்த்தனை தேவைப்படுகிறது என்றும் டுவிட் செய்தார்.

கிரிக்கெட் ரசிகர் தாக்கரே...
பால் தாக்கரே சிறந்த கிரிக்கெட் ரசிகர். இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதற்குக் காரணம் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கிறது என்பதுதான் என சாம்னாவில் எழுதினார் தாக்கரே.












Click it and Unblock the Notifications