அசாமில் மீண்டும் இன மோதல் - பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
கோக்ராஜர்: அசாம் மாநிலத்தின் போடோலாந்து பகுதியில் மீண்டும் இன மோதல் வெடித்திருக்கிறது. நேற்று முன் தினம் தொடங்கிய இம்மோதல் இதுவரை 11 பேரை பலி வாங்கியிருக்கிறது.
அசாமின் போடோலாந்து தன்னாட்சிப் பிரதேச மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கும் போடோ இனமக்களுக்கும் இடையே அண்மையில் பெரும் மோதல் வெடித்தது. இதில் 78 பேர் பலியாகினர். சுமார் 4 லட்சம் பேர் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ நேரிட்டது. இதனால் ராணுவம் அப்பகுதியில் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அப்பகுதியில் மோதல் வெடித்திருக்கிறது. இம்மோதலில் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ராணுவம் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. போடோலாந்து பகுதியில் தங்கு தடையின்றி ஆயுத புழக்கம் இருப்பதே மோதலுக்கு காரணம் என்பதால் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போரை கண்டுபிடித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இம்மோதலால் கோக்ராஜர் மாவட்டத்தில் காலரவையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications