பால்தாக்கரே மறைவு... பாஜகவினருக்கான விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார் பிரதமர் மன்மோகன்சிங்

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வரும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு கடந்த வாரம் பிரதமர் மன்மோகன்சிங் விருந்து கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளான திமுக, முஸ்லிம் லீக் போன்றவற்றுக்கு நேற்று பிரதமர் விருந்து கொடுத்தார். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதிப்பது பற்றி 'சஸ்பென்ஸ்' யுக்தியை கடைபிடிப்பதாக அறிவித்திருக்கும் திமுக சார்பில் டி.ஆர்.பாலு இந்த விருந்தில் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டி.ஆர். பாலு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும்போது திமுகவின் நிலையைத் தெளிவுபடுத்துவோம் என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும் பிரதமர் இன்று இரவு விருந்து அளிக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே காலமானதைத் தொடர்ந்து இந்த விருந்து நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன்சிங் ரத்து செய்திருக்கிறார். இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜும் பிரதமர் மன்மோகன்சிங்குடன் போனில் பேசினார். இதைத் தொடர்ந்து விருந்து ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications