பாகிஸ்தானுடனான பிரச்சனைகளை தீர்க்க இந்தியாதான் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்: முஷாரஃப்
டெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பெரிய நாடான இந்தியாதான் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் ஏட்டின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
ஒரு பிரச்சனையில் சாமரசம் என்பதை பெரிய தரப்பிலிருந்துதான் உருவாக்க வேண்டும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனைகளை பெரிய நாடான இந்தியாதான் முன்னெடுத்து தீர்வு காண வேண்டும். சியாச்சின் பனிபிரதேசம் மற்றும் சர் கிரீக் ஆகிய பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும். காஷ்மீர் விவகாரம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
எல்லைகளில் படிப்படியாக ராணுவத்தை குறைத்தல். இரண்டு பகுதி காஷ்மீருக்கும் கூடுதல் சுயாட்சி அதிகாரம், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை திறப்பது என்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
நான் ஆட்சிக்காலத்தில் இருந்த போது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இந்த திட்டத்தை தெரிவித்தேன். அப்போது சில முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்த விவகாரங்களில் தீர்வு காண வேண்டும் என்ற நேர்மை அவசியம் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகள், உளவு அமைப்புகள் போன்றவற்றின் தலையீட்டை குறைக்க வேண்டும். கடந்த கால முட்டுக்கட்டைகள் என்ன என்பதை அறிந்து உடைக்க வேண்டும். இந்த மூன்றும்தான் ஒரு தலைமைக்குரிய செயல்பாடுகளாக இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதத்தின் மீது நம்பிக்கை வைப்பது அதிகரிக்கிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்னை சர்வாதிகாரியாக குறிப்பிடுகின்றனர். அப்படி என்னைக் கூறுவதை நான் ஏற்க முடியாது. அதை நீங்கள் ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம்.
இந்தியா, பாகிஸ்தான் உறவுகள் சீர்குலைவது எப்போது எனில் இருநாட்டு உளவு அமைப்புகளும் முரண்படுகிற போதுதான்! அதாவது அப்போது நாம் எதிரிகளாகிவிடுகிறோம்.
சோவியத் ரஷ்யா உயிர்ப்போடு இருந்த பனிப்போர் காலத்தில் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இந்தியாவின் 'ரா' அமைப்பும் சோவியத் ரஷ்யாவின் கேஜிபியும் இணைந்து பிரச்சனைகளை உருவாக்கின. அது கடந்தகாலம்தான். அதைப் போல இன்னொரு காலம் உருவாகிவிடக் கூடாது.
ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தெரியும் என்று கூறுவதை நான் ஏற்க முடியாது. நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். 500% உறுதியாக சொல்ல முடியும். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு நிச்சயமாக பின்லேடன் பதுங்கி இருந்தது தெரியாது. அமெரிக்காவின் சிஐஏவால் ஏன் செப்டம்பர் 11 தாக்குதலை அறிய முடிவில்லை. அவர்கள் என்ன உறங்கிக் கொண்டிருந்தார்களா? ஐ.எஸ்.ஐ.யும் கொஞ்சம் தூங்கவிடுங்களேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications