ஐயப்பனை தரிசிக்க இன்டர்நெட்டில் முன்பதிவு: பக்தர்கள் ஆர்வம்

48 நாட்கள் மண்டல கால பூஜை திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கார்த்திகை 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த சில நாட்களாக சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் திரள்வது வாடிக்கை. நேற்றைய தினம் சனிக்கிழமை என்பதால் 18ம் படி அருகே காலை முதலே நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே வெகு தொலைவிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக கடந்த வருடம் முதல் இன்டர்நெட் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
மண்டல சீசனுக்கு நடை திறக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பே இம்முறை முன்பதிவு தொடங்கியது. இன்டர்நெட்டில் முன்பதிவு செய்தால் அதிகபட்சமாக 1 மணிநேரத் தில் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திரும்பலாம். 17ம் தேதி வரை 3.75 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் தமிழக பக்தர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், காஷ்மீர் உட்பட பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
இன்டர்நெட்டில் முன்பதிவு செய்தால் வரிசையில் நீண்ட நேரம் நிற்காமல் எளிதில் தரிசனம் செய்ய முடியும் என்பதால் இந்த திட்டத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கேரளா போலீசின் கட்டுப்பாட்டில் தொடங்கப்பட்ட இணையதளம் மூலம் கடந்த வருடம் சுமார் 7.5 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்தனர். இந்த வருடம் இந்த இணையதளம் மேலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளதால் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications