நம்பிக்கையில்லா தீர்மானம்: சுஷ்மாவின் உதவியை நாடிய மமதா?- தீர்மானத்தை முறியடிக்க காங். வியூகம்
கொல்கத்தா: வரும் 22ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் உதவியை நாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.
வரும் 22ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. அப்போது மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அக்கூட்டணியில் இருந்து விலகிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். இதற்கிடையே மத்திய அரசுக்கு எதிராக எந்த கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதனால் மமதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவளிக்குமாறு மமதா பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜை கேட்டுக் கொண்டதாக பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். ஆனால் தீர்மானத்தை பாஜக ஆதரிக்குமா இல்லையா என்பதை அவர் கூறவில்லை.
இதற்கிடையே சுஷ்மாவிடம் ஆதரவு எதுவும் கோரவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மக்கள் விரோத நடவடிக்கையால் தான் மமதா நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவிருக்கிறார். பெரும்பான்மையில்லாத அரசு ஆட்சியில் இருக்கக் கூடாது. அதனால் எங்களின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
தீர்மானத்தை முறியடிக்க காங்கிரஸ் வியூகம்
இந்நிலையில் மமதா கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க காங்கிரஸ் கட்சி புதிய வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கிறது.
இது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில்,
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது. நாடாளுமன்றத்தில் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் ஆதரவு இருப்பதால் திரிணாமூல் காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடையும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அகமது பட்டேல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கோ 305 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதனால் மத்திய அரசு தனது முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications