இளைஞர்களிடம் திமுக- கட்டுப்பாட்டை கடைபிடிக்கலைன்னா கட்சி உருப்படாம போய்விடும்: கருணாநிதி எச்சரிக்கை

சென்னையை அடுத்த மறைமலை நகரில் நேற்று திமுக இளைஞரணியின் புதிய நிர்வாகிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட கருணாநிதி பேசுகையில்,
ஸ்டாலினுக்கு புகழாரம்
மு.க.ஸ்டாலின் திமுக உறுப்பினர், ஆயிரம் விளக்கு வட்டத்தில் ஒருவர், மேயர், துணை முதல்வர் எனப் பல பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். ஸ்டாலினின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறீர்கள். அவருக்கு தொடர்ந்தும் ஆதரவு தர வேண்டும். ரஷிய அதிபராக இருந்த லெனினுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அதிபர் ஸ்டாலின். அவர் மறைந்த மாதம் பிறந்ததால் ஸ்டாலின் என்று பெயர் வைத்தேன். ஸ்டாலின் என்றால் இரும்பு மனிதர் என்று அர்த்தம். இவர் உடலால் இல்லாவிட்டாலும் உள்ளத்தால் இரும்பு மனிதர்.
ஸ்டாலின் கால்படாத கிராமமே இல்லை..
ஒரு காலத்தில் உன் உடல் நலத்தைப் பார்த்துக் கொள் என்று அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழகன் போன்றோர் எனக்கு அறிவுரைத்தனர். இப்போது அதைப்போல ஸ்டாலினுக்குச் சொல்லும் அளவுக்கு உழைக்கிறார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் கால்படாத குக்கிராமமே இல்லை எனலாம். மாநில மாநாடு நடத்துவதற்கு ஸ்டாலின் அனுமதி கேட்டார். அதை திருச்சியில் நடத்தலாம் என்று கூறியுள்ளேன்.
திராவிட எதிர்ப்பு- பாரதிராஜாவுக்கு பதில்
திராவிடம் தீய சொல் இல்லை: திராவிடம் என்ற சொல்லை சில நண்பர்கள் தீய சொல் என்கின்றனர். திராவிடத்தை அழித்தே தீருவோம் என்று புஜம் தட்டிப் புறப்பட்டுள்ளனர். முன்னொரு காலத்தில் திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தி எத்தனை சீட்டுகள் தருகிறீர்கள் என்று கேட்டவர்கள்தான் அவர்கள். அந்தக் காலம் மீண்டும் வரும். திராவிடம் என்ற வார்த்தையை கலையுலகைச் சேர்ந்த நண்பர் (பாரதிராஜா) ஒருவரும் கேலிப் பேசியதாகச் சொன்னார்கள்.
திராவிடம் என்பது பெரியார் எங்களுக்கு நினைவுபடுத்திய வார்த்தை. திராவிடம் தீய சொல் என்று சொல்பவர்கள் அனைவரையும் ஜன கண மனவில் வரும் "திராவிட உத்கல...' என்ற வார்த்தையும், தமிழ்த் தாய் வாழ்த்தான "நீராருங் கடலுடுத்த' பாடலில் வரும் "திராவிட நல்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு என்னிடம் வந்து பேசுங்கள்.
இன்றும் சென்னை கடற்கரையில் உள்ள உ.வே.சுவாமிநாத ஐயர் சிலைக்கு கீழே திராவிட என்ற வார்த்தை உள்ளது. அது நச்சுச்சொல் அல்ல. அந்த சொல் ஒரு இனத்தின் பெயர். அதைத்தான் தி.மு.க. என பெயர் சூட்டியுள்ளோம். அந்த சொல் இன்று தமிழக மக்கள் மனதில் ஊடுருவி உள்ளது.
திராவிட இனம் நமது பூர்வீக இனம். அந்த இனத்தின் உரிமையைப் பெற இளைஞர் அணி நிர்வாகிகளாகிய நீங்கள் உங்கள் பணி என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தோடு உங்கள் சந்திப்பு முடிந்து விடாமல், அடுத்து சிறு குழுக்களாக அமர்ந்து பேசி, நமது லட்சியங்களை வென்றெடுக்கும் கருத்துகளை, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். மக்கள் தூதுவர்களாக நீங்கள் மாற வேண்டும்.
கட்டுப்பாடு இல்லைன்னா கட்சி உருப்படாது
கடமை, கண்ணியம் என்ற இரண்டையும்விட கட்டுப்பாட்டுக்குத்தான் திமுகவினர் மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பெரியார் கூறினார். கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காவிட்டால் திமுக உருப்படாது என்றும் கூறினார். அப்படி உருப்படாமல் போன கட்சிகளை நாட்டில் பார்க்கிறோம். அதுபோன்ற இயக்கமாக திமுக இருக்கக்கூடாது. இளைஞர்களை நம்பித்தான் இயக்கம் இருக்கிறது. உங்களைப் போன்ற இளைஞர்களை நம்பித்தான் திமுகவை ஒப்படைக்கிறேன்.
தமிழர்களின் மானம், சுயமரியாதையை காப்பாற்றுங்கள். திராவிடத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தமிழை, நல்லதை, தன்மானத்தை, பெரியார்- அண்ணாவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை புறம் தள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications