ஈவ் டீசிங் செய்தால் டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், அரசு உதவிகள் கிடையாது
குவாலியர்: ஈவ் டீசிங் செய்பவர்களுக்கு இனி ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் இதர அரசு உதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த வர்த்தக கண்காட்சியில் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஈவ் டீசிங்கில் ஈடுபடும் நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட மாட்டாது. ஈவ் டீசிங் செய்பவர்கள் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டரில் சேகரித்து வைக்கப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஈவ் டீசிங் செய்வர்கள், பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
மத்திய பிரதேசத்தில் ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கவே இப்படி ஒரு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.