பாட்னாவில் சாத் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அதலத் கஞ்சில் கங்கை கரையோரம் நேற்று மாலை சாத் திருவிழா நடந்தது. அப்போது ஏராளமான மக்கள் அங்கு கூடி வழிபாடு நடத்தினர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மூங்கில் பாலத்தை ஏராளமான மக்கள் கடந்து சென்றனர். அப்போது மூங்கில் பாலம் திடீர் என்று உடைந்தது. இதையடுத்து மக்கள் பயந்து கொண்டு வேகமாக பாலத்தை கடக்க முயன்றனர்.
ஒரே நேரத்தில் ஏராளமானோர் குறுகிய பாலத்தில் முந்தியடித்துக் கொண்டு ஓடியபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அரசின் கவனக்குறைவு தான் காரணம் என்று பீகார் மாநில எதிர்கட்சியும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை முடிந்த 6 நாட்கள் கழித்து சூர்ய பகவானை ஆற்றங்கரையோரம் நின்று வழிபடுவது தான் சாத் திருவிழா. இந்த திருவிழா வட மாநிலங்களில் அதுவும் குறிப்பாக பீகாரில் மிகவும் பிரபலம். பக்தர்கள் 36 மணிநேரம் விரதம் இருந்து சூர்ய பகவானுக்கு கோதுமை, பால், கரும்பு மற்றும் தேங்காய் ஆகியவற்றை படைப்பர். கடந்த சனிக்கிழமை துவங்கிய இந்த திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.












Click it and Unblock the Notifications