தூக்கிலிடப்பட்டான் அஜ்மல் கசாப்: புனே சிறையில் தண்டனை நிறைவேற்றம்

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.
மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இந்தத் தகவலை மத்திய அரசு ரகசியமாகவே வைத்திருந்தது.
இந் நிலையில் அவனை கடந்த நான்கு ஆண்டுகளாக வைத்திருந்த மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புனேவில் உள்ள எரவாடா சிறைக்கு போலீசார் இடம் மாற்றினர்.
எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications