சிபிஎம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்: மமதா பானர்ஜி

நாளை துவங்கும் நாடாளுமன்ற குள்ரிகால கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி முனைப்பாக உள்ளார். அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிராகத் தான் உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்கத் தயார் என்று மமதா தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவித்திருப்பதன் மூலம் தான் கொண்டு வரவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் இழந்துவிட்டாரா? இடதுசாரிகளை அணுகியுள்ளதன் மூலம் அவர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று சிபிஐ தலைவர் ஏ.பி. பர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மூத்த சிபிஎம் தலைவர் கூறுகையில், இருக்கும் எண்ணிக்கையைப் பார்க்கையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது சரியல்ல என்று நாங்கள் ஆரம்பம் முதலே சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு மமதா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றார்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவது தான் மத்திய அரசை இக்கட்டுக்கு ஆளாக்கும் வழியாகும் என்று சிபிஎம் கருதுகிறது.
இது குறித்து மமதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசுக்கு எதிராக எங்கள் கட்சி கொண்டு வரவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க தயங்கினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே அந்த தீர்மானத்தை கொண்டு வரட்டும். அதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஆனால் அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு அஞ்சி தங்கள் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications