தூக்கு தண்டனை: நாதுராம் கோட்சே முதல் அஜ்மல் கசாப் வரை
இந்தியாவில் இந்த ஆண்டு இரண்டு தீபாவளி கொண்டாடியிருக்கின்றனர். நவம்பர் 13 நரகாசுரனை அழித்த தினம் என்று பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள் நவம்பர் 21ம் தேதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிடப்பட்ட தினத்தன்று பட்டாசு வெடித்துள்ளனர். தீயசக்தி அழிந்த தினம் தீபாவளி என்றால் தீவிரவாதி ஒருவன் தூக்கிலிடப்பட்ட தினத்தையும் தீபாவளியாக எண்ணி மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளில் அஜ்மல் கசாப் 56வது குற்றவாளி என்கின்றது புள்ளிவிபரம். எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட சில முக்கிய குற்றவாளிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

காந்தியை கொன்ற கோட்சே
மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேக்கு, 1949ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1949ம் ஆண்டு அம்பாலா சிறைச்சாலையில் நவம்பர் 15ம் தேதி கோட்சே தூக்கிலிடப்பட்டான். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஒரு வார காலத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது கோட்சேவுக்கு மட்டும்தான்.

குழந்தைகளை கொன்ற ரங்கா பில்லா
இரு குழந்தைகளை கடத்திக் கொன்ற, குல்ஜீத்சிங் என்ற ரங்கா மற்றும் ஜஸ்பீர்சிங் என்ற பில்லாவுக்கு 1982ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பின், இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. ரங்கா, பில்லாவால் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயரில் தற்போது வீரதீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

4 மாணவர்களுக்கு தூக்கு
புனேயில் உள்ள புகழ்பெற்ற அபினவ் கலா மகாவித்யாலயாவில் படித்த நான்கு மாணவர்கள் ஜோஷி - அப்யங்கர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், 1976- 1977ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 10 பேரை கொலை செய்திருப்பது தெரிந்தது. ராஜேந்திர ஜாக்கல், திலீப் தியானோபா சுதார், சாந்தாராம் கன்கோஜி ஜக்தப் மற்றும் முனாவர் ஹாருண் ஷா என்ற அந்த நான்கு பேருக்கும் 1983 நவம்பர் 27ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்திரா காந்தி கொலையாளிகள்
இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கேகர் சிங் மற்றும் சத்வந்த்சிங் என்ற இருவருக்கு 1989 ஜனவரி 6ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சேலத்தில் ஆட்டோ சங்கர்
கேரளாவில் 1992 ம் ஆண்டு தொடர் கொலைகளை செய்த ரிப்பர் சந்திரன் என்பவன் கண்ணனூர் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
இதேபோல் தொடர் கொலைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், 1995 ஆகஸ்ட் மாதம் 27ம் நாள், சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான். தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆட்டோ சங்கர் தூக்கு தண்டனை.

சிறுமியை கற்பழித்தவனுக்கு தூக்கு
மேற்கு வங்க மாநிலத்தில் 1990ம் ஆண்டு 14 வயது சிறுமி ஹீதல் பரேக்கை கற்பழித்துக் கொன்ற வழக்கில், தனஞ்செய் சட்டர்ஜி என்பவன், 2004 ஆகஸ்ட் 14ல் தூக்கிலிடப்பட்டான்.

தீவிரவாதி அஜ்மல் கசாப்
இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் பிடிபட்டு அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 21ம் 2012 ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.

நாடு முழுவதும் 3,717 மரண தண்டனை குற்றவாளிகள்
தேசிய குற்றப்புலனாய்வு புள்ளிவிபரத்தின்படி 2003 ஜனவரி முதல் 2011 டிசம்பர் வரை நாடு முழுவதும் 1,223 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது மொத்தத்தில் 3,717 குற்றவாளிகள் நாடு முழுவதும் சிறையில் உள்ளனர்.

உச்ச நீதிமன்றம் உறுதி
இதுவரை 530 குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. உத்தரப் பிரதேசம் மரண தண்டனை விதிப்பதில் முன்னணியில் இருக்கிறது. 2003 முதல் 2011 காலகட்டத்தில் 317 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்காளம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கேரளாவில் 32 கைதிகள்
இதே காலகட்டத்தில் கேரளாவில் 32 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கண்ணணூர் சிறைச் சாலைகளில் மட்டுமே தூக்கமே வசதி உள்ளது. கண்ணணூர் சிறையில் ஒரே நேரத்தில் இருவரை தூக்கில் போடும் வசதி உள்ளதாம்.

தூக்கு போட ஆட்கள் இல்லை
நாடு முழுவதும் பல சிறைச்சாலைகளில் தூக்கில் போடும் அலுவலர்கள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதற்கான ஆட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிக்கு அதிகம் படித்த நபர்களே விண்ணப்பித்தனராம்.

மரண தண்டனை எதிர்ப்பாளர்கள்
மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்தவர்களும், பல என்ஜிஓக்களும் இணைந்து மரண தண்டனைக்கு எதிராக கருத்துக்களை கூறிவருகின்றனர். இவர்கள் சிறைச் சாலைகளில் தூக்கில் போடும் நபர்களின் பணியிடங்களை நிரப்பக்கூடாது என்றும், இந்த பணி நியமனத்தை நிறுத்த வேண்டு என்றும் வலியுறுத்தியதால் தற்போது வரை யாரும் புதிதாக நியமனம் செய்யப்படாமல் உள்ளது.












Click it and Unblock the Notifications