நானிருக்க வேறொருவரை திருவாவடுதுறை ஆதீனமாக்குவதா? கோர்டுக்கு போவேன் மாஜி இளைய ஆதீனம்
மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதினத்திற்கு புதிய ஆதீனமாக தன்னை செயல்படவிடாமல் மீனாட்சிசுந்தர தேசிக பரமாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக முன்னாள் இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சன்னதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே உள்ளது திருவாவடுதுறை ஆதீன மடம். இதன் 23வது ஆதீனமான குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மரணம் அடைந்ததையடுத்து 24வது ஆதீனமாக மீனாட்சிசுந்தர தேசிக பரமாச்சாரியார் பொறுப்பேற்றார். இந்நிலையில் ஆதீனத்திற்கு வந்த முன்னாள் இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சன்னதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துக் கொடுத்த நிர்வாகத் திட்டம் ஒன்று உள்ளது. அதன்டி தான் ஆதீனம் செயல்பட வேண்டும். அந்த நிர்வாகத் திட்டத்தின் 18வது பிரிவின் கீழ் என்னை திருவாவடுதுறை இளைய ஆதீனமாக நியமித்தார்கள். குற்ற வழக்கில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளையும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 23வது ஆதீனம் தனது உடல் நிலையை பயன்படுத்தி வேறு ஒருவரை இளைய ஆதீனமாக்க முயற்சி செய்கிறார் என்பதை அறிந்தேன். உடனே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலிடம் மனு கொடுத்தேன்.
ஆனால் நேற்று ஆதீனம் முக்தி அடைந்தது குறித்த தகவல் அறிந்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சென்று சட்டப்படியான சட்ட வாரிசாக செயல்பட முயன்றேன். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் என்னை மடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தக்க நடவடிக்கை எடுப்போம். விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications