26ல் தர்மபுரியில் வன்முறை வெறியாட்டம் நடந்த கிராமத்திற்கு வரும் மாயாவதி
தர்மபுரி: தர்மபுரியில் கலப்பு திருமணத்தால் ஜாதி கலவரம் நடந்த கிராமத்திற்கு உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி வருகிறார்.
தர்மபுரியை அடுத்த செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகள் திவ்யா. வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசனும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதை ஏற்க மறுத்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 2 கிராமங்களிலும் ஜாதி வெறியாட்டம் தொடங்கியது. பெரும் வன்முறை வெடித்தது. தலித் மக்கள் வாழும் நத்தம் காலணி கிராமத்திற்குள் புகுந்து வன்னிய மக்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
தலித் மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதோடு அங்கிருந்த நகை, பணம், பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த தகவல்களை தமிழக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெற்றுள்ளார் அக்கட்சியின் தலைவர் மாயாவதி. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு தமிழக நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் 26ம் தேதி அவர் வன்முறை வெறியாட்டம் நடந்த கிராமத்திற்கு வருகின்றார். அன்று அவரது தலைமையில் தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாடம் நடைபெறுகிறது. முன்னதாக அந்த கிராமத்திற்கு அம்பேத்கரின் பேரன் பேராசிரியர் ஆனந்த் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications