தயாநிதி தொகுதியில் ராகுல் போட்டியிட கங்காவிடம் மனு கொடுத்த காங்கிரஸார்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது எம்.பியாக இருக்கும் மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸார் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னைக்கு வந்த கட்சி மேலிடப் பிரதிநிதியிடம் அவர்கள் கூட்டமாக மனுவும் கொடுத்தனர்.
லோக்சபா தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி சத்தம் போடாமல் தயாராகி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் நான்கு பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்து கட்சி சார்பில் யாரை வேட்பாளராகப் போட்டியிடலாம் என்று கருத்து கேட்டு வருகிறார் ராகுல் காந்தி.
அந்த வகையில் தமிழகத்திற்கும் நான்கு பேர் வந்துள்ளனர். இவர்கள் கங்கா பவானி தலைமையில் வந்துள்ளனர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பலரும் சீட் கேட்டு மனு கொடுத்தனர்.
மத்திய சென்னை யாருக்கு?
மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் யார் போட்டியிடலாம் என்று காங்கிரஸாரை உட்கார வைத்து ஆலோசனை கேட்டார் கங்கா பவானி. அதற்கு அவர்கள், தத்தமது கருத்துக்களைக் கூறினர்.
காங்கிரஸின் பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கோஷ்டித் தலைவரின் பெயர்களைக் கூறி இவரையே நிற்க வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர். பலர் ஜி.கே.வாசன் பெயரைப் பரிந்துரைத்தனராம்.
கார்த்தி அல்லது ராகுலுக்கு தர அனுராதா கோரிக்கை
மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அனுராதா அபி தலைமையிலான ஒரு குழுவினர், ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல அனுராதா அபி தனியாக கொடுத்த மனுவில், ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாம், அது கட்சியை வலுப்படுத்தும் என்றும் கூறியிருந்தார்.
வட சென்னை வாசனுக்கே
அதேபோல வட சென்னை தொகுதியில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் போட்டியிட வேண்டும் என்று கூறி ஒரு குரூப் கங்கா பவானியிடம் மனு கொடுத்ததாம். இந்தக் கருத்தாலோசனைக் கூட்டத்தில் ஏகப்பட்ட கோஷ்டிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications