தூத்குக்குடியில் துணை தாசில்தார் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவர், 2 பெண் குழந்தைகள் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் துணை தாசில்தார் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவன், 2 பெண் குழந்தைகள் என அந்த குடும்பத்தில் உள்ள 4 பேருமே தீயில் கருகி பலியாகினர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவானந்தம்(40). வழக்கறிஞர். அவருடைய மனைவி சிவஞானம்(35). தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றினார். அவர்களுக்கு ரிஷிகா(9), பரமேஸ்வரி(7) என்ற 2 மகள்கள் இருந்தனர்.
சிவானந்தம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கேயே வழக்கறிஞராக பணியாற்றினார். இதனால் பணி நிமித்தமாக அவர் அடிக்கடி தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு சென்று வந்துள்ளார். அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குழந்தைகள் தூங்கிய பிறகு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சிவஞானம் நேற்று இரவு 10.30 மணிக்கு சமையலறையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை படுக்கையறைக்கு எடுத்து வந்து கணவர் முன்பே தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார்.
இதைப்பார்த்த சிவானந்தம் அதிர்ச்சி அடைந்து மனைவியைக் காப்பாற்ற முயன்றார். உடலில் தீப்பிடித்தவுடன் சிவஞானம் அலறிய சத்தம்கேட்டு தூங்கிய குழந்தைகள் பதறியடித்து எழுந்து தாயை காப்பாற்ற முயன்றனர். இதில் சிவானந்தம் மற்றும் குழந்தைகள் மீதும் தீப்பிடித்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது சிவஞானம் மற்றும் ரிஷிகா தீயில் கருகி பிணமாகக் கிடந்தனர். உயிருக்கு போராடிய சிவானந்தம் மற்றும் பரமேஸ்வரியை மீட்டு அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு சிவானந்தம் சிகிச்சை பலனின்றி இறந்தார். உயிருக்கு போராடிய சிறுமியிடம் நடந்தது குறித்து போலீசார் கேட்டதற்கு தந்தையும், தாயும் சண்டை போட்டதாகத் தெரிவித்தாள். அதன் பிறகு இன்று காலை 9 மணிக்கு சிறுமியும் பலியானாள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிஜமாகவே குடும்பத் தகராறால் தால் சிவஞானம் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications