முதியோருக்கு பென்ஷன் பெற்றுத்தர சென்ற தலித் பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கு அடி உதை
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதியவர்கள் சிலருக்கு ஓய்வூதியம் பெற்றுத்தர வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்ற தலித் பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கு அடி உதை விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்டது கரு.வடதெரு பஞ்சாயத்து. இதன் தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த கலைமணி உள்ளார். அவர் தலித் என்பதால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மறுத்து வருகிறார்கள். குடியரசு தின விழாவின் போது பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அவர் தேசிய கொடி ஏற்ற தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவரது கணவர் அண்ணாத்துரை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் சிலருக்கு ஓய்வூதியம் பெற்றுத் தர வாணக்கன்காடு வி.ஏ.ஓ.அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரை சிலர் அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அண்ணாத்துரை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அண்ணாத்துரை மீதான தாக்குதல் குறித்து ஆதிதிராவிடர் நல ஆணைய ஆராய்ச்சி அலுவலர் சந்திரபிரபா, விசாரணை அதிகாரி லிஸ்டர் ஆகியோர் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து அண்ணாத்துரையை தாக்கியவர்களை பாராபட்சம் இன்றி கைது செய்ய வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications