வடசென்னை அனல்மின் நிலையத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ
சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு உடனடியாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான மின்பற்றாக்குறையைத் தாங்கள் அறிவீர்கள். தமிழகத்தில் நிலவும் 4,000 மெகாவாட் மின்பற்றாக்குறையைச் சந்திக்கவும், மின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்தவும் எனது அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் 5,813 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,600 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள வடசென்னை அனல்மின் நிலையமும் (நிலை-2) ஒன்று.
இந்த மின் திட்டத்தின் இரண்டு யூனிட்டுகளும் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏப்ரல்-மே மாதத்தில் மின் உற்பத்திக்குத் தயாராக உள்ளது. ஆனால் அதற்குக் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் மின் உற்பத்தியைத் துவங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த மின் திட்டம் தொடர்பாகப் புதிய விண்ணப்பித்தல் ஏதுமின்றி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications