சாதி வெறியைத் தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள்... திருமாவளவன்
திருச்சி: அரசியல் ஆதாயத்துக்காக சிலர் சாதி வெறியைத் தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சியில் நடந்த திருமாவளவன் பொன்விழாவையொட்டி அவருக்கு 54.5 பவுன் தங்க காசுகள் வழங்கப்பட்டன. திமுக தலைமையக அரங்கமான கலைஞர் அறிவாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
அப்போது கலப்புத் திருமணம் ஒன்றையும் திருமாவளவன் நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த 65 வருடங்களாக சாதி வெறியாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மார்க்சியம், லெனினியம், பெரியாரிசம் பேசுகிறவர்கள் சாதி வெறியை தூண்டி எதிர் வினையை ஏற்படுத்துகிறார்கள். சாதி அரசியல், அரசியல் ஆதாயத்துக்காக மேற்கொள்ளப்படுகிறது.
தர்மபுரி சம்பவத்தில் தொடர்புடைய 2000 பேரில் 120 பேர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மீதி உள்ளவர்களை கைது செய்யாமல் தவிர்க்கவே வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் அரசு ஒப்படைத்திருக்கிறது. இந்த நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும், பொறுமையை இழந்து விடக்கூடாது.
இந்த கலவரத்தில் தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள், சங்கங்களை குறிப்பிட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. எனவே உண்மை குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.
வீரபாண்டி ஆறுமுகம் படத்துக்கு அஞ்சலி
இதற்கிடையே இன்று சேலம் மாவட்டம் பூலாவாரி கிராமத்திற்கு வந்த திருமாவளவன் அங்கு சமீபத்தில் மரணமடைந்த முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும், சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் காலமானது வேதனை அளிக்கிறது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஆகியோரின் கொள்கை வழியில் நடந்து மக்களுக்காக உழைத்தார். சமூக நீதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும், சிறப்பாக களப்பணியாற்றினார். பதவி பவுசுகளுக்காக தனது கொள்கையை மாற்றாமல் கடைசி வரை கொள்கைப் பிடிப்புடன் இருந்து மக்களுக்காக உழைத்தார். அவரது திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது.
அவரது இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications