டெங்குவுடன் சேர்ந்து தமிழகத்தை மிரட்டும் பன்றிக்காய்ச்சல்: திருப்பூரில் ஒருவர் பலி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு பயத்தில் இருக்கும் தமிழக மக்களை தற்போது பன்றிக் காய்ச்சல் மிரட்டுகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு திருப்பூரில் ஒருவர் பலியாகியுள்ளார்.
திருப்பூரில் உள்ள முதலிபாளையத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி (55). அவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. இதையடுத்து அவர் முதலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவமனையிலும் பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.
காய்ச்சல் அதிகரித்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பரிசோதனையில் அது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிர் இழந்தார். இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவரது உறவினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உள்ளதா என்று சோதித்து பின்னர் அவர்களுக்கு தடுப்பு மருந்து கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications