சென்னையில் 10 கிமீ தொலைவில் பெண் காரில் எரித்து கொலை, வாலிபர் கழுத்தறுத்து கொலை
சென்னை: சென்னையில் இளம்பெண் ஒருவர் காருடன் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் உள்ள புனித ஜான் பள்ளி அருகில் நேற்று இரவு 1 மணி அளவில் கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த பள்ளி காவலாளிகள் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு வீரர்களும், நீலாங்கரை போலீசாரும் அங்கு சென்றனர். தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்துவிட்டது. காருக்குள் டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் பெண் ஒருவரின் உடல் எரிந்து எலும்புக்கூடு மட்டும் இருந்தது. அந்த பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். கார் நம்பர் பிளேட் முற்றிலுமாக எரிந்துவிட்டதால் அது யாருடைய கார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
யாரோ அந்த பெண்ணை கொலை செய்து உடலை காரில் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த கொலையை செய்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலாங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு யாராவது காணாமல் போயுள்ளார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் நடந்த 10 கிமீ தொலைவில் உள்ள கோவளம் குன்னூர்காடு பகுதியில் பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லும் வழியில் இன்று காலை 25-30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தார். லுங்கியும், வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்த அவரை யாரோ கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
10 கிமீ தொலைவில் ஒரு ஆணும், பெண்ணும் கொல்லப்பட்டுள்ளனர். ஏதோ ஒரு கும்பல் தான் அவர்களை கடத்தி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications