எப்.டி.ஐ: ஓட்டெடுப்புக்கு ஓகே சொன்னதால் லோக்சபாவில் அமைதி- ராஜ்யசபாவில் அமளி!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எந்த அலுவலையும் மேற்கொள்ள முடியாமல் போனது! தற்போதைய குளிர்கால கூட்டத் தொடருக்கும் அதே கதி ஏற்படும் என்ற நிலைமைதான் முதல் 4 நாட்கள் நீடித்தது! அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இந்த 4 நாட்களும் முடக்கி வைத்திருந்தன! கூட்டணிக் கட்சிகளே இந்த விவகாரத்தில் ஆதரவு தராத நிலையில் மத்திய அரசு கையைப் பிசைந்து கொண்டிருந்தது!
இந்நிலையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் அரசை எதிர்த்து வந்த திமுகவை ஒருவழியாக தாஜா செய்தது மத்திய அரசு! இதைத் தொடர்ந்து அரசுக்கு திமுக ஆதரவு உண்டு என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம்! உடனே வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு மத்திய அரசும் தயார் என்று அறிவிக்கப்பட்டது!
இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடுவதற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை உள்துறை அமைச்சரும் அவை முன்னவருமான சுஷில்குமார் ஷிண்டே சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து சுஷ்மா ஸ்வராஜ், மக்களவைத் தலைவர் மீராகுமாரை சந்தித்தார்.
மக்களவையில்...
பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. மக்களவையில், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதி தொடர்பாக 184-வது விதியின் கீழ் விவாதம் நடத்த அனுமதிக்கப்படும் என்று மீராகுமார் அறிவித்தார். இதை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார். இதைத் தொடர்ந்து மக்களவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற்றன.
மாநிலங்களவையில்...
மாநிலங்களவை கூடியதும் பாஜக எம்.பிக்கள், வெங்கையா நாயுடு ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அன்னிய முதலீடு பிரச்சினையை எழுப்பினர். அப்போது பாஜக உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். திரிணாமுல் காங்கிரசாரும் இதே விவகாரத்தைக் கிளப்பினர். ஆனால் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்களோ, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அரசுப் பணியில் பதவி உயர்வுக்கு வழிவகுக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இந்த அமளிகளால் அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பகல் 12 மணிக்கு கூடிய போது இடஒதுக்கீடு பிரச்சனையால் அமளி நீடித்தது. இதனால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசைப் பொறுத்தவரையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் என்பது மக்களவைக்கு மட்டுமே என்கிறது. மாநிலங்களவையில் போதுமான ஆதரவு இல்லை என்பதால் மாநிலங்களவையில் அன்னிய முதலீடு விவகாரத்தில் விவாதத்துக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் விடுவதாகவும் இல்லை என்பதால் அமளி தொடர்கிறது!












Click it and Unblock the Notifications