பாஜகவில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் எதியூரப்பா

கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா கடந்த 40 ஆண்டுகளாக பாஜகவில் இருந்துள்ளார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அவரை பாஜக என்று பதவி விலக வைத்ததோ அன்றில் இருந்து அவருக்கும், கட்சிக்கும் இடையேயான போராட்டம் துவங்கியது. எதியூரப்பா பதவி விலகிய பிறகு அவரது ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதல்வராக்கினார். அவரோ முதல்வரான பிறகு எதியூரப்பாவை கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து தன்னை மீண்டும் முதல்வராக்குமாறு எதியூரப்பா கட்சியை வலியுறுத்தினார். ஆனால் அவருக்கு பதில் அவரது இன்னொரு ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை பாஜக முதல்வராக்கியது. எதியூரப்பாவின் பரிந்துரையில் முதல்வரான ஷெட்டரும் பதவிக்கு வந்த பிறகு அவரை கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து தன்னையே முதல்வராக்குமாறு எதியூரப்பா போர்க்கொடி தூக்கினார். ஆனால் கட்சி மேலிடம் மசியாததால் கர்நாடக மாநில பாஜக தலைவர் பதவியையாவது தருமாறு கேட்டார். ஆனால் அதையும் கட்சி மேலிடம் கேட்கவில்லை.
எதியூரப்பாவுக்கு இந்தப் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் பாஜக மூத்த எம்பி அனந்த்குமார், அத்வானி மூலமாக காய் நகர்த்தி எதியூரப்பாவை ஒடுக்கினார். இதற்கு தற்போதைய மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் துணையாக உள்ளார்,
இதையடுத்து பாஜகவில் இருந்து விலகப் போவதாக எதியூரப்பா குண்டைப் போட்டார்.
வழக்கம் போல் எதியூரப்பா மிரட்டி விட்டு பணிந்து விடுவார் என்று பாஜக லேசாக நினைத்துவிட்டது. ஆனால் அவரோ இன்று முறைப்படி பாஜகவில் இருந்து விலகினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வரும் டிசம்பர் 9ம் தேதி புதுக் கட்சியும் துவங்குகிறார்.
லிங்காயத்து சமூகத் தலைவரான எதியூரப்பாவுக்கு கர்நாடகத்தில் ஜாதிரீதியாக ஆதரவு அதிகம். அவருடன் சேர்ந்து சில எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் கட்சியில் இருந்து விலகவில்லை.
தேசிய அளவில் பாஜகவின் தலைவர் நிதின் கட்காரியை பதவி விலகக் கோரி பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கையில் கர்நாடகத்தில் பாஜகவின் நிலைமை மோசமடைந்துள்ளது. எதியூரப்பாவை எப்படியாவது தாஜா செய்துவிடலாம் என்று நினைத்த பாஜகவின் நினைப்பு கனவாய் போனது.
இது ஒரு புறம் இருக்க எதியூரப்பாவுடன் மிஞ்சிப் போனால் ஒன்று அல்லது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தான் போவார்கள் என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் கூறி வந்தனர். அவர்கள் கூறியதற்கு மாறாக யாருமே எதியூரப்பாவுடன் செல்லவில்லை. ஆனால், இப்போதைக்கு அவருடன் போகாவிட்டாலும் வரும் சட்டமன்றத் தேர்தலின்போது பல எம்எல்ஏக்களும் எதியூரப்பா கட்சிக்குத் தாவப் போவது நிச்சயம், குறிப்பாக லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள்.
இந்நிலையில் இன்று கண்கலங்கியபடியே நிருபர்களிடம் பேசிய எதியூரப்பா, பாஜக எனக்கு எல்லாவற்றையும் தந்தது. நான் பாஜகவுக்காக எனது வாழ்க்கையையே அர்ப்பணித்தேன். பாஜகவில் உள்ள சிலரால் தான் நான் கட்சியை விட்டுப் போகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிவிட்டேன்.
அடுத்த சட்டசபை தேர்தலில் எனது கர்நாடக ஜனதா கட்சி பெரும்பான்மையோடு வெற்றி பெறும்.
நான் அமைதியாக இருந்ததை எனது பலவீனமாகக் கருதி விட்டனர். ஜெகதீஷ் ஷெட்டர் ஆட்சியை நான் கவிழ்க்க விரும்பவில்லை. இதனால் தான் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை என்னுடன் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்றார் எதியூரப்பா.
தான் நம்பிக்கை வைத்திருந்த பாஜக தன் முதுகில் குத்திவிட்டதே என்று அவர் வருத்தப்பட்டார்.
இதையெல்லாம் தனக்குக் கிடைத்த நல்ல சகுனமாக அமைதியுடன் மிக மகிழ்ச்சியாக பார்த்து வருகிறது காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications