கர்நாடக முதல்வருடனான பேச்சுவார்த்தையின்போது வெளிநடப்பு செய்தாரா ஜெ.?

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், காவிரி நீர் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நேற்று பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழகத்தின் கோரிக்கையை அவர் விலாவாரியாக எடுத்து வைத்தார். ஆனால் கர்நாடகத் தரப்பு தனது பிடிவாதத்திலிருந்து சற்றும் இறங்கி வரவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையின்போது முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு மாநில முதல்வர்களுக்கிடையிலான 26வது பேச்சு இது. இருப்பினும் இதில் எந்தவிதமான சாதகமான முடிவும் ஏற்படாது என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். கர்நாடகத்தின் பிடிவாதம் காரணமாக அதுபோலவே நடந்தது.
ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இக்கூட்டம் நடந்து முடிந்து விட்டது. கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த ஜெயலலிதா, செய்தியாளர்களிடம் பேசவில்லை. மாறாக தனது காருக்குச் சென்ற அவர் அங்கிருந்தபடி மைக்கில் பேசுகையில், நான் அனைவரிடத்திலும் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், கர்நாடகம், தன்னால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர விரும்பவில்லை என்று கூறி விட்டது என்றார்.
ஆனால் தாங்கள் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை விளக்கியுள்ளார். ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று நாங்கள் சொல்லவில்லை என்றார். அதேபோல முதல்வர் ஷெட்டாரும், முதல்வர் ஜெயலலிதா சொல்லியுள்ளது தவறானது என்றார்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பெல்லாம் செய்யவில்லை என்றும் கர்நாடகம் விளக்கியுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசுத் தரப்பில் கூறுகையில், கூட்டம் ஒரு மணி நேரம் வரை நடைபெறலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அதற்கு முன்னதாகவே முடிந்து விட்டது. முதல்வர் ஜெயலலிதாவும் கூட்டம் முடிந்ததால் கிளம்பிச் சென்றார். அவரை அமைச்சர் பசவராஜ் பொம்மை வழியனுப்பி வைத்தார். மற்றபடி வெளிநடப்பெல்லாம் நடக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications