காவிரி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது ஏன்? புட்டு புட்டு வைக்கும் ராமதாஸ்
சென்னை: காவிரி பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தையின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா இறங்கி வந்தும், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அடம்பிடித்ததால் தான் அது தோல்வி அடைந்தது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் பெங்களூரில் நேற்று நடத்திய பேச்சுக்களின் முடிவு எப்படி இருக்கக் கூடாது என தமிழ்நாட்டு விவசாயிகள் வேண்டிக் கொண்டிந்தார்களோ, அதற்கு நேர் எதிரான வகையில் அமைந்துவிட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகிக் கொண்டிருக்கும் சம்பா பயிரைக் காக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக அரசு கூறிவிட்டது. கர்நாடகத்தின் இந்த நிலைப்பாடு தமிழக விவசாயிகளை அதிர்ச்சியும், வேதனையும் அடையச் செய்திருக்கிறது.
இரு மாநில முதல்வர்களும் தங்களது நிலைப்பாட்டிலிருந்து சற்று இறங்கி வந்தால் ஏதேனும் தீர்வு ஏற்படலாம் என்பதே உச்ச நீதிமன்றத்தின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. அதைப் போலவே சம்பா சாகுபடிக்கான தண்ணீர் தேவை 60 டி.எம்.சி என்ற போதிலும் அதை 30 டி.எம்.சி ஆக குறைத்துக்கொள்ள தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், கர்நாடக முதல்வரோ ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்பதில் உறுதியாக இருந்ததால் பேச்சுக்கள் தோல்வியடைந்துவிட்டன.
நேற்றைய பேச்சுக்களின் போது கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்தும், குடிநீர் தேவை குறித்தும் கர்நாடக முதல்வர் தவறான புள்ளி விவரங்களை அளித்திருக்கிறார். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளிலும் சுமார் 75 டி.எம்.சி தண்ணீர் இருக்கும் நிலையில் வெறும் 37 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் இருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் பெங்களூரின் குடிநீர் தேவைக்காக ஓராண்டுக்கு 8 முதல் 10 டி.எம்.சி தண்ணீர் போதும் என்ற நிலையில் அரையாண்டிற்கு 20 டி.எம்.சி தண்ணீர் தேவை என்று கூறி தமிழகத்தை ஏமாற்ற முயற்சி செய்திக்கிறார்.
மனிதாபிமானம், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகிய எதையும் மதிக்க மாட்டோம் எங்கள் விருப்பப்படி தான் செயல்படுவோம் என கர்நாடக அரசு கூறிவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கவும், தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு நேரம் வந்துவிட்டது. கர்நாடகத்தின் நிலைப்பாடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் இந்த பிரச்சினையில் நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு நாளை விசாரணைக்கு வரும்போது மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகுவதால் கவலையடைந்த பல விவசாயிகள் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மீதமுள்ள பயிர்களையும், உழவர்களையும் காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இதை உணர்ந்து இந்த பிரச்சினையில் இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications