ஆசிட் வீசி முகத்தை சிதைத்த கணவனுடன் மீண்டும் நரக வாழ்க்கை: வங்கதேச பெண்ணின் சோகம்
வங்கதேசத்தின் ஷக்திரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நூர்பானு. இவர் கடந்த 18 வருடங்களாக தனது கணவரிடம் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வந்தார். அடி, உதைதான் எப்போதும். இதனால் மனம் வெறுத்துப் போன இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதை அறிந்து கோபமடைந்த இவரது கணவர் மனைவி முகத்தில் ஆசிட் வீசினார்.
இதில் நூர்பானுவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன. பார்வை நரம்புகள் சேதமடைந்ததால் பார்வை பறிபோனது. முகமும் அகோரமாகிப் போனது. இந்த நிலையில் நூர்பானுவுக்கு விவாகரத்து கிடைத்தது.
மனைவி மீது ஆசிட் ஊற்றிய பின்னர் 10 மாதம் தலைமறைவாக இருந்து வந்த நூர்பானுவின் கணவரை பின்னர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வருடம் சிறையில் இருந்த அவரை அவரது தாயார் ஜாமீனில் வெளியே அழைத்து வந்தார்.
அதன் பிறகு நூர்பானு, மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு அவரது மாமியார் மிரட்டியும், வற்புறுத்தியும், வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார். நூர்பானுவின் மகன்களைப் பிரித்து வைத்து மிரட்டி அவரை தனது வீட்டுக்குக் கூட்டிப் போய் விட்டாராம் மாமியார். இதனால் மறுபடியும் நரகத்திற்குத் தள்ளப்பட்டார் நூர்பானு. தற்போது பெரும் நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் கணவருடன் வசித்து வரும் நூர்பானு அதே அடி உதையுடன் மறுபடியும் கஷ்டத்தில் சிக்கியுள்ளாராம்.
தன்னை ஆசிட் ஊற்றி சீரழித்த கணவரையே மீண்டும் மணந்து கொண்டு குடும்பம் நடத்துமாறு நூர்பானுவை அவரது கணவர் குடும்பத்தார் நிர்பந்தம் செய்து வருகிறார்களாம்.
இவரது நிலை குறித்து விஎஸ்ஓ என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆவணப் படமாக தயாரித்துள்ளது. வங்கதேசத்தில் கணவர்களிடம் சிக்கி கொடுமைப்படும் மனைவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் ஆசிட் வீச்சுக்களும் அங்கு சகஜமாம்.