சட்டசபை வைரவிழாவுக்கு கருணாநிதியை ஏன் அழைக்கவில்லை: தமிழக அரசுக்கு ஈ.வி.கே.எஸ். கண்டனம்
கடலூர்: சட்டசபை வைரவிழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதியை அழைக்காததற்கும், எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தை விழா மேடையில் அமர வைக்காததற்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டசபையின் வைர விழாவுக்கு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை முறைப்படி அழைக்கவில்லை. மேலும் விழா நடந்த அன்று எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மேடையில் அமர வைக்கவில்லை. தமிழக அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. ஆனால் தமிழக அரசோ அப்படியொன்றும் செய்யவில்லை. இதுவும் கண்டனத்திற்குரிய செயலாகும். என் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்க காலதாமதமாவதற்கு மத்திய அரசு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியை ஆளுங்கட்சியினர் குறை கூறுவது தவறு. அங்கு மின் உற்பத்தியை துவங்க மாநில அரசு தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள். ஆனால் பாஜகவோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த திட்டத்தை எதிர்க்கிறது. தமிழகத்தில் நடக்கும் ஜாதிக் கலவரங்களைத் தடுக்க பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுவரை திமுகவை விமர்சித்து வந்த இளங்கோவனுக்கு திடீரென கருணாநிதி மீது பாசம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக் கேட்டு தன்னை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் இளங்கோவன் மீது கருணாநிதி தனது அதிருப்தியைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications