சென்னையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கழுத்து அறுத்து கொலை
சென்னை: சென்னையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை ஷீலாமேக வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் தென்னரசு (55). அவரது மனைவி கோட்டையம்மாள். அவர்களின் மகள்கள் சமித் நாச்சியார், மெத்தின். தென்னரசு தனது குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஆலங்காத்தான் தெருவில் வசித்து வந்தார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ராமாபுரம் மூன்லைட் போரூர் நெடுஞ்சாலையில் பரணி மெஸ் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். உணவகத்தை கவனித்துக் கொள்ள அவர் ராமாபுரத்தில் தங்கி இருந்தார். வாரம் ஒரு முறை மட்டும் வீட்டுக்கு செல்வார். அவரது உணவகத்தில் பாலு, ஜான், முகமது ஆகியோர் பணியாற்றினர். நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் 10 மணிக்கு உணவகத்தை மூடிவிட்டு தென்னரசு கல்லாப் பெட்டி அருகேயும், ஊழியர்கள் மொட்டை மாடியில் உள்ள அறையிலும் தூங்கினர்.
இன்று காலை 6 மணிக்கு பாலு உணவகத்திற்குள் சென்றபோது தென்னரசு கழுத்து அறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒரு தெருவில் சென்று நின்றுவிட்டது.
காற்று வரட்டும் என்பதற்காக தென்னரசு உணவகத்தின் ஷட்டரை சற்று திறந்து வைத்து தூங்கும் பழக்கமுள்ளவர். நேற்று இரவும் அவ்வாறு திறந்து வைத்துவிட்டு தூங்கும்போது கொள்ளையர்கள் புகுந்து அவரிடம் கல்லாப் பெட்டியின் சாவியைக் கேட்டிருக்கலாம், அவர் கொடுக்க மறுத்தவுடன் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே கல்லாப் பெட்டி உடைக்கப்படவில்லை. அதனால் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து உணவக ஊழியர்களிடம் விசாரித்தபோது அருகில் உள்ள கடைக்காரர்களுடன் அடிக்கடி சிறு தகராறு ஏற்படுவதுண்டு என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications