சமாஜ்வாடி, பகுஜன் கட்சிகள் மிரட்டப்பட்டனவா?: சுஷ்மா புகாருக்கு சல்மான் குர்ஷித் மறுப்பு
டெல்லி: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை எதிர்க்கும் தீர்மானத்தை தோற்கடிக்க சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் சிபிஐயைக் காட்டி மிரட்டப்பட்டன என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறிய புகாரை மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித்திருக்கிறார்.
சுஷ்மா புகார்- குர்ஷித் மறுப்பு
மக்களவையில் அன்னிய முதலீட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 218 பேரும் ஆதரவாக 253 பேரும் வாக்களித்திருந்தனர். 43 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகியவை வெளிநடப்பு செய்ததால் மத்திய அரசு தப்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், பகுஜன் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை சிபிஐயை வைத்து மத்திய அரசு மிரட்டியது. இதனாலேயே அவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை நிராகரித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், சுஷ்மா கொண்டுவந்த தீர்மானம் தோற்றுப் போனதற்காக நாட்டின் நிர்வாக அமைப்பை குறைகூறுவது நியாயமில்லை என்றார்.
மைனாரிட்டி மன்மோகன்சிங் அரசு -மமதா
இதனிடையே 35 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே மத்திய அரசு வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு மைனாரிட்டி அரசு என்று ஃபேஸ்புக் சமூகவலைதளத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியிருக்கிறார். மேலும் "சுயநலவாதிகள்" எடுத்த முடிவால்தான் அரசுக்கு 253 வாக்குகள் கிடைத்தன என்று திமுகவையும் மமதா மறைமுகமாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications