அன்னிய முதலீடு: ராஜ்யசபாவில் அரசை ஆதரித்து வாக்களிப்போம்- மாயாவதி

லோக்சபாவில் நேற்று சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தொடர்பான வாக்கெடுப்பில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன்சமாஜ் ஆகியவை பங்கேற்கவில்லை. இதனால் மத்திய அரசு தப்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சிபிஐயால் இரண்டு கட்சிகளும் மிரட்டப்பட்டதாலேயே அவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அரசைக் காப்பாற்றியிருக்கின்றன என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற அன்னிய முதலீடு தொடர்பான விவாதத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசினார். மாயாவதியின் முழு பேச்சுமே பாஜகவை மிகக் கடுமையாகவே சாடியதாக இருந்தது. சுஷ்மா ஸ்வராஜின் கருத்தை முழுவதுமாக நிராகரித்து மாயாவதி பேசியிருந்தார். சிபிஐ பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இப்படித்தான் மிரட்டலுக்கு பயன்படுத்தியதா என்றும் மாயாவதி கேள்வி எழுப்பினார்.
பாரதிய ஜனதா கட்சிக்கோ அல்லது சிபிஐக்கோ பகுஜன் சமாஜ் கட்சி அச்சப்படாது. எனக்கு எதிராக சிபிஐ அமைப்பை பயன்படுத்தியது பாஜகதான். தாஜ் காரிடார் வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு என்று என் மீது வழக்குகளைப் பாயக் காரணமே பாஜகதான் என்றும் மாயாவதி சாடினார்.
அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என்றும் தமது பேச்சின் முடிவில் மாயாவதி அறிவித்தார்.
மாயாவதியின் சுஷ்மா பற்றிய பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் பேசிய பேச்சை மாநிலங்களவையில் எப்படி மேற்கோள் காட்டலாம் என்று பாஜக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பகுஜன் சமாஜ் எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்க நேரிட்டது. பின்னர் அவை கூடிய போதும் மாயாவதியின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தனர்.












Click it and Unblock the Notifications