தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பந்த்: அரசு பஸ்கள் மீது கல்வீச்சு, சாலை மறியல்
திருவாரூர்: காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி டெல்டா பகுதியில் இன்று பந்த் நடந்து வருகிறது. இதையொட்டி தனியார் பள்ளிகளும் விடுமுறை அளித்துள்ளன.
காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பெற்றுத் தரத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி டெல்டா பகுதியில் இன்று ஒகு நாள் பந்த் நடத்தப்படும் என்று விவசாய கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி காவிரி டெல்டா பகுதிகளில் இன்று பந்த் நடைபெற்று வருகிறது. இதற்கு தனியார் பள்ளிகள் மற்றும் வணிகர் சங்ககளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மன்னார்குடியில் உள்ள அரசு கேஸ் குடோனை விவசாயிகள் முற்றுகையிட்டனர். புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் புளிச்சங்காடு கைகாட்டியில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் புளிச்சங்காடு, கைகாட்டி, நாகுடி, ரெகுநாதபுரத்தில் விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்.
திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே மன்னார்குடி எம்.எல்.ஏ உலகநாதன் தலைமையில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
காவிரி பிரச்சனை தொடர்பாக தஞ்சையிலும் இன்று பந்த் நடந்து வருகிறது. புலவர்நத்தம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் 7 அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதில் அதன் கண்ணாடிகள் நொறுங்கின.
மேலும் திருவாரூர் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, சீர்காழி பகுதி வர்த்தகர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை மூடியுள்ளனர். நாகையை அடுத்து உள்ள கீவலூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
வெறிச்சோடிய சிதம்பரம்:
விவசாயிகளின் பந்தை முன்னிட்டு சிதம்பரத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன.
தமிழக விவசாயிகள் சங்கம், வர்த்தகர் சங்கம் மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் காவிரி பிரச்சனை தொடர்பாக இன்று பந்த் நடத்தி வருகின்றன.
சிதம்பரத்தில் உள்ள 4 வீதிகள், பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் மேலரதவீதியில் இருக்கும் ஜவுளி, மளிகை, நகைக் கடைகள், ஹோட்டல்கள், மீன் மார்க்கெட் என அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் நகரமே வெறிச்சோடியுள்ளது.
இதற்கிடையே அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள வர்த்தகர்கள் தங்கள் கடைகளை திறந்து வைத்து கருப்பு கொடி ஏற்றி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications