காவிரி நீர் நாளை மறுநாள் மேட்டூர் 'வரும்'.. கடை மடைக்கு வராது!
மேட்டூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே திறந்துவிட்டிருக்கும் 'சொற்ப' நீர் மேட்டூர் அணையை நாளை மறுநாள் வந்தடைந்தாலும் கடை மடைப்பகுதியான நாகப்பட்டினத்துக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 5-ந்தேதி முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்கிறது. இந்த நீர் ஞாயிற்றுக்கிழமையன்று மேட்டூரை வந்தடையும். அங்கிருந்து திருச்சியை இந்த நீர் வந்தடைய 20 மணி நேரமும் கடைமடையான நாகப்பட்டினத்தை வந்தடைய 48 மணிநேரமும் ஆகும்.
திறக்கப்பட்டிருக்கும் இந்த சொற்ப நீரை பூமி உறிஞ்சி, வெப்பத்தில் காணாமல் போய் எஞ்சியது காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு வந்தாலும் கடைமடைக்கு போக வாய்ப்பில்லை. டெல்டா பகுதியில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிரை முழுமையாக நனைக்கவும் வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.68 அடியாக இருந்தது. வினாடிக்கு 2 ஆயிரத்து 928 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications