2வது நாளாக குமரி கடலில் சீற்றம், கொந்தளிப்பு: ராட்சத அலையைப் பார்த்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
குமரி: குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சீசனையொட்டி எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் கடல் சீற்றத்துடன் உள்ளது. சீற்றம் ஏற்றபட்ட உடனேயே கடலில் அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது.
இன்று 2வது நாளாக கடல் சீற்றம் தொடர்கிறது. இதற்கிடையே அவ்வப்போது மழை பெய்தததால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது 10 அடி முதல் 15 அடி வரை ராட்சத அலைகள் எழுந்தன. கடலின் அழகை ரசிக்கலாம் என்று திரிவேணி சங்கமத்தி்ற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ராட்சத அலைகள் கரையை நோக்கி பாய்ந்து வருவதைப் பார்த்து ஓட்டம் பிடித்தனர்.
இவ்வாறு கடல் சீற்றமாக இருப்பதால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய படகு சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கடலில் அமைந்திருக்கும் அந்த 2 இடங்களுக்கும் செல்ல அதிகாலை 5 மணியில் இருந்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழமணக்குடி, மேலமணக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications