தேனியில் வாலிபர் தற்கொலை: அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி மீது வழக்கு
தேனி: தேனியில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலை செய்யத் தூண்டியதாக அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து(21). அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை மாடிக்கு சென்ற சுப்புராஜ் தனது மகன் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலுக்கு அருகில் ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் நாகமுத்து கூறியிருப்பதாவது,
என் மரணத்திற்கு ஓ.ராஜா தான் காரணம். என் மீது திருட்டுப்பழி சுமத்திவிட்டார். இது தொடர்பாக, தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதை டி.எஸ்.பி. சேது தள்ளுபடி செய்துவிட்டார்.
மேல்முறையீடு செய்தால் உன்னையும், உன் குடும்பத்தையும் திருட்டுப் பட்டம் சுமத்தி கொலை செய்து விடுவேன் என, ராஜா கூறினார். நான் புகார் செய்தேன்; புகாரை திரும்பப் பெறாவிட்டால், திருட்டு வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்கிறார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன். எனக்கும், குடும்பத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை.
அதனால் என் மரணத்தையே, பாதுகாப்புக்கு அர்ப்பணிக்கிறேன். காரணம்: 1. நகராட்சி தலைவர் ஓ.ராஜா, 2. மணிமாறன், 3. தென்கரை பேரூராட்சி தலைவர், வி.எம்.பாண்டி, 4. சிவக்குமார், 5. ஞானம், 6. லோகு, 7. சரவணன். இப்படிக்கு எஸ்.நாகமுத்து என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நாகமுத்துவை தற்கொலை செய்யத் தூண்டியதாக அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ. ராஜா உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. ராஜரத்தினம் விசாரணை நடத்தி வருகின்றார்.












Click it and Unblock the Notifications