திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி ஆலயத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் இலவச தரிசனப் பகுதியில் 18 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலை வெங்கடாசலபதியைக் காண ஆண்டுதோறும் பக்தர்கள் அலைமோதுகின்றனர். புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த நிலையில் தற்போது எந்த பண்டிகையுமே இல்லாத நிலையிலும் திருமலையில் சனி, ஞாயிறு தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.
ஞாயிறன்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை 43 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு வரை 1 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட போதிலும் தரிசனம் செய்ய 4 மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தர்ம தரிசனப் பகுதியில் 18 மணி காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் 12 டிகிரிக்கும் குறைவான வெப்பம் பதிவானதால் கடும் குளிரில் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நேற்று மதியம் 2 மணி முதல் 300 ரூபாய் சிறப்பு கட்டண கவுண்டர் மூடப்பட்டது. தங்கும் விடுதி, முடி காணிக்கை, லட்டு, உள்பட அனைத்து கவுண்டர்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.
திருமலையில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. தர்ம தரிசனத்துக்கு சென்றவர்கள் கூட 2 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். இந்த நிலையில் விடுமுறை நாளான 2-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications