பதவி உயர்வில் இட ஒதுக்கீடு.. 'தூரத்து சொந்த'ங்களால் அவதிப்படும் மத்திய அரசு
டெல்லி: பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் ஆதரவோடு அன்னிய முதலீடு விவகாரத்தில் பெருமூச்சுவிட்டிருக்கும் காங்கிரஸ் இதே கட்சிகளால் பெரும் சிக்கலில் தத்தளித்தும் வருகிறது.
லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை தோற்கடித்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் பங்குதான் முதன்மையானது.
இதேபோக்கில் வங்கித்துறையில் சீர்திருத்தத்தை அமல்படுத்திவிடலாம் என நினைக்கிறது மத்திய அரசு. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் ராஜ்யசபாவை நடத்த விடாமல் முடக்கி வைத்திருப்பதால் கவலையில் இருக்கிறது மத்திய அரசு.
அரசுப் பணிகளில் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று குரல் கொடுக்கிறது பகுஜன் சமாஜ். இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ராஜ்யசபாவில் தொடர்ந்து அக்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் சமாஜ்வாடி கட்சியோ, இதை நாங்கள் அனுமதிக்க முடியாது. நாட்டின் 82% பெரும்பானையினராக இருக்கும் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனைப் புறந்தள்ளிவிட்டு இப்படி ஒரு சட்டம் கொண்டுவர சமாஜ்வாடி கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று எதிர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த இரு கட்சிகளின் மோதலால் ராஜ்யசபா தொடர்ந்து முடங்கியே இருக்கிறது. மத்திய அரசு கொண்டுவர நினைக்கின்றன வங்கித் துறை சீர்திருத்தம் போன்றவை முடங்கியே கிடக்கிறது. இரு கட்சிகளையும் சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடிய ' தூரத்து சொந்த' கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளால் இடியாப்ப சிக்கலில் இருக்கிறது மத்திய அரசு!












Click it and Unblock the Notifications