மாணவர்கள் பலி எதிரொலி படிக்கட்டில் பயணம் செய்தால் அபராதம்: போலீஸ் எச்சரிக்கை

திங்கட்கிழமையன்று திருப்போரூரில் இருந்து தியாகராயநகருக்கு வந்த மாநகரப்பேருந்து கந்தன்சாவடி அருகே ரிவர்சில் வந்த லாரி மீது மோதியது. இதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியாயினர். இந்த விபத்து தொடர்பாக பேருந்து டிரைவர் அசோக்குமார், கண்டக்டர் உதயகுமாரை கைது செய்தார். லாரி டிரைவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தலா ரூ.100 வசூலிக்கப்படும்
இதனிடையே படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்து சட்டத்தை முறையாக அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணிகளை கீழே இறக்கி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். பின்னர் அவர்களை நடமாடும் கோர்ட்டுக்கு அழைத்து சென்று அபராதம் விதிக்கப்படும். தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். இந்த சட்டத்தை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
10 பேருக்கு அபராதம்
இந்த நிலையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பேருந்து நிறுத்தங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பேருந்து படிக்கட்டில் பயணம் செய்பவர்களை கண்டித்து உள்ளே செல்லும்படி அறிவுறுத்தினர். தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
கனரக வாகனங்கள் செல்ல தடை
விபத்துக்குப் பின்னர்
இந்த சாலையில் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. துரைப்பாக்கம் சிக்னல் அருகே மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 10 பேரை பிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை மேற்கு போக்குவரத்து போலீஸ் சரகத்துக்குட்பட்ட பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி ரோடு, உக்கடம், ஒப்பணக்காரவீதி, என்.எச்.ரோடு, குட்ஷெட் ரோடு, தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு பகுதிகளில் போலீசார் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.
கோவையில் கண்டக்டர்களுக்கு அபராதம்
இதேபோல் கோவையில் பேருந்து படிக்கட்டுகளில் நிற்கும் அளவிற்கு பயணிகளை ஏற்றியதால் அந்த பேருந்துகளின் கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேல் இது போன்று அதிக பயணிகளை ஏற்றக்கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.
மேற்கு போக்குவரத்து சரக பகுதியில் நடந்த இந்த சோதனையில் தனியார் மற்றும் அரசுப் பேருந்து கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கிழக்கு போக்குவரத்து சரகத்திற்குட்பட்ட காந்திபுரம், அவினாசி ரோட்டில் உள்ள அனைத்து சிக்னல் பகுதிகள், ராமநாதபுரம், சிங்காநல்லூர், புலியகுளம், 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, நஞ்சப்பா ரோடு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 15 பேருந்து கண்டக்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications