ஓட்டுக்காக வரவில்லை… மது அரக்கனை எதிர்த்தே என் நடைபயணம்… வைகோ
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 12ம் உவரியில் தொடங்கிய பயணம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
அவருடன் தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியைச் சேர்ந்த 1200க்கும் மேற்ப்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
வைகோ நடந்து செல்லும் பாதை எங்கும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மதிமுகவினர் மட்டுமல்லாது பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் உற்சாகமாக வரவேற்று அவரது நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அவர்களிடையே பேசிய வைகோ, மனிதர்களை விலங்குகளாக மாற்றும் மதுவை ஒழிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கூட மதுவின் போதையில் சிக்கியிருப்பது வேதனையான விசயம் என்று கூறிய வைகோ, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே மதுவின் பிடியில் இருந்து மக்களை காக்கமுடியும் என்றார்.
திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய வைகோ, ஆதித்தனார் கல்லூரி, வீரபாண்டியன் பட்டணம், காயல், ஓடக்கரை, காயல்பட்டணம் பஜார், இரத்தினபுரி, இலட்சுமிபுரம், அழகாபுரி, வழியாக அறுமுகநேரியை அடைகிறார். அங்கு மதிய உணவிற்குப் பின்னர் 4மணியில் கிளம்பி இரவு பழைய காயல் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இரவு அங்கேயே தங்குகின்றனர்.
நடைபயணம் மேற்கொள்ளும் தொண்டர்களுக்கு சிக்கன், வான்கோழி பிரியாணி போன்றவை வழங்கப்படுகின்றன. இதனால் தொண்டர்கள் சோர்வின்றி உற்சாகமாக நடந்து வருவதாக மதிமுகவினர் தெரிவித்தனர். வைகோ நடந்து செல்லும் பாதைகளில் சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டு பின்னர் அவர் கடந்து சென்ற பின்னர்தான் திறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications