டெலிவரி ஊழியர்களுக்கு ஆப்பு? இந்தியாவில் டிரோன் டெலிவரி சேவை தொடக்கம்! ஏன் முக்கியம்
டெல்லி: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திரைப்படங்களிலும், தொழில்நுட்பக் கண்காட்சிகளிலும் மட்டுமே பார்த்த ட்ரோன் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யும் கனவு, தற்போது இந்தியாவில் நிஜமாக மாறத் தொடங்கியுள்ளது. மருந்துகள், மருத்துவ டெஸ்ட் கிட்கள், இ-காமர்ஸ் பார்சல்கள் உள்ளிட்ட பொருட்களை ட்ரோன்கள் மூலம் அனுப்பும் சேவைகள் நாட்டின் பல பகுதிகளில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெலவரி துறை என்பது மிக பெரிதாக மாறி வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பிளிங் இட் போன்ற குவிக் காமர்ஸ் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, டெலிவரி சேவையையே பெரும்பாலும் அதை நம்பி இருக்கிறது. இருப்பினும், டெலிவரிக்கு கணிசமான தொகை செலவாகவே செய்கிறது.

டிரோன் டெலிவரி
இதற்கிடையே நாம் சினிமாக்களில் மட்டும் பார்த்து வந்த டிரோன் டெலிவரி இந்தியாவில் இப்போது சோதனை முறையில் தொடங்கியுள்ளது. ட்ரோன் தொழில்நுட்ப வளர்ச்சி, அரசின் புதிய விதிமுறைகள் மற்றும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குவிக் காமர்ஸ் சந்தை ஆகியவையே இந்த டிரோன் டெலிவரிக்கு முக்கிய காரணமாக உள்ளன.
2021ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டு வந்த டிரோன் ரூல்ஸ், டிஜிட்டல் ஸ்கை தளம், பிஎல்ஐ திட்டம் மற்றும் பிவிஎல்ஓஎஸ் எனப்படும் Beyond Visual Line of Sight (BVLOS) சோதனைகள் ஆகியவை ட்ரோன் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இது தொடர்பாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான Edgistifyயின் இணை நிறுவனர் உமாங் ஷுக்லா கூறுகையில், "ட்ரோன் டெலிவரி என்பது இனி ஒரு சோதனை தொழில்நுட்பம் அல்ல. உண்மையான லாஜிஸ்டிக்ஸ் தீர்வாக மாறி வருகிறது" என்றார்.
முக்கியம்
இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் 10 நிமிடங்களில் மளிகை பொருட்கள் டெலிவரி, ஒரே நாளில் இ-காமர்ஸ் டெலிவரி போன்ற சேவைகள் சாதாரணமாகிவிட்டன. இருப்பினும், இதற்கு எரிபொருள் செலவு, டெலிவரி ஊழியர்களின் சம்பளம், வாகன பராமரிப்பு, காப்பீடு உள்ளிட்ட மிக பெரிய செலவுகளை டெலிவரி நிறுவனங்கள் ஏற்க வேண்டியுள்ளது.
இது தொடர்பாக Skye Air Mobility நிறுவனத்தின் சிஇஓ அங்கித் குமார் கூறுகையில், "5 கிமீ தூரத்திற்குள் ட்ரோன் மூலம் பொருட்களை அனுப்பும் செலவு, சாலை வழி டெலிவரியை விட மிகவும் குறைவு. மேலும், போக்குவரத்து நெரிசல் ட்ரோன்களை பாதிக்காது. குறிப்பாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், அவசர உதிரி பாகங்கள் போன்ற பொருட்களை ட்ரோன் மூலம் விரைவாக கொண்டு செல்ல முடியும்" என்றார்.
கிராமங்கள்
அதேநேரம் ட்ரோன் டெலிவரியின் மிக பெரிய பயன் நகரங்களை விட கிராமப்புறங்களில்தான் இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சாலை வசதி குறைவாக உள்ள மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கு மருந்துகள், அரசு ஆவணங்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்களைக் குறுகிய நேரத்தில் கொண்டு செல்ல ட்ரோன்கள் உதவும்.
ஆன்லைன் ஆர்டர்கள்
இந்தியாவின் ஆன்லைன் ஆர்டர்களில் சுமார் 60 சதவீதம் டையர் 2 நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களிலிருந்தே வருகிறது. இதனால் எதிர்காலத்தில் கிராமப்புற லாஜிஸ்டிக்ஸ் துறையில் ட்ரோன்களின் பங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரோன் டெலிவரி வேகமாக வளர்ந்தாலும், பல சவால்கள் இன்னும் நீடிக்கின்றன. அதாவது பொதுவாகவே ட்ரோன்களின் பேட்டரி திறன் குறைவு. மேலும், டிரோன்கலால் குறைந்த எடையை சுமக்க முடியும். மழைக்காலங்களிலும் அதை இயக்க முடியாது.
உயரமான கட்டடங்கள், மின்கம்பிகள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் போன்றவையும் பெரிய சிக்கல்களாக உள்ளன. மேலும் ட்ரோன் பதிவு, காப்பீடு, சான்றிதழ், அனுமதிக்கப்பட்ட விமான பாதைகள் ஆகிய விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டி இருக்கும்.
பறிபோகாது
மேலும், ட்ரோன்கள் வந்துவிட்டதால், டெலிவரி ஊழியர்களின் வேலை முழுமையாக பறிபோகும் என்று கூற முடியாது என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால்.. வீட்டு முகவரியை கண்டறிதல், கேஷ் ஆன் டெலிவரி, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் தருவது, அடுக்குமாடி குடியிருப்புகளில் நேரடியாக பொருள் வழங்குவது ஆகியவற்றை ட்ரோன்களால் செய்ய முடியாது. அதற்கு பதிலாக ட்ரோன்கள் கிடங்கு இடையேயான பொருட்களை எடுத்து செல்வது, அவசர உதவி பொருட்கள் மற்றும் கிராமப்புற டெலிவரிகளில் தான் அதிகம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி ட்ரோன் தொழில்நுட்ப வளர்ச்சியால் ட்ரோன் பைலட், பராமரிப்பு பொறியாளர், பேட்டரி மேலாண்மை நிபுணர், சாப்ட்வேர் டெவலப்பர், ட்ரோன் கட்டுப்பாட்டு மைய பணியாளர்கள் போன்ற புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications