எலி கழிவுகள், கரப்பான் பூச்சிகள்.. பிரபல உணவகத்தில் பெரிய ஷாக்.. பாயும் நடவடிக்கை
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பல முக்கியமான பகுதிகளில் செயல்பட்டு வந்த 5 பிரபல உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கெட்டுப்போன உணவுப் பொருட்கள், கரப்பான் பூச்சி தொல்லை, எலி கழிவுகள், பூஞ்சை படர்ந்த காய்கறிகள் மற்றும் பல்வேறு சுகாதார விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் உணவகங்களுக்குப் பெயர் போனது. ஒவ்வொரு ஏரியாவுக்கும் 4, 5 புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கும். இருப்பினும், ஹைதராபாத்தில் பல்வேறு ஹோட்டல்களிலும் முறையாக உணவு பாதுகாக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே சைபராபாத் மாநகராட்சி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஜூலை 4ஆம் தேதி கொண்டாப்பூர், கச்சிபௌலி மற்றும் மதினகுடா பகுதிகளில் அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.

அதிர்ச்சி
கொண்டாப்பூரில் உள்ள வாஹ் மண்டி என்ற உணவகத்தில் கெட்டுப்போன சாதம், வேகவைத்த முட்டைகள் மற்றும் சிக்கன் விங்ஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அவை உடனடியாக அதிகாரிகள் முன்னிலையில் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், பச்சை இறைச்சியும் சமைத்த இறைச்சியும் ஒன்றாகவே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. சைவ மற்றும் அசைவ உணவுகளும் முறையாகப் பிரித்து வைக்கப்படவில்லை. பாத்திரங்கள் கழுவும் பகுதி போதிய வசதிகள் இல்லை.. சூடான நீரில் சுத்தம் செய்யும் நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. காய்கறி வெட்டும் பகுதியில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்திருந்ததும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
உணவுகள்
கச்சிபௌலியில் உள்ள மண்டி கிங் என்ற உணவகத்தில், பச்சை மற்றும் சமைத்த அசைவ உணவுகள் மூடப்படாமல் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியளிக்கும் வகையில், ஒரே சமையல் எண்ணெய்யைத் தொடர்ந்து நான்கு நாட்களாகப் பயன்படுத்தி வந்ததும் ஊழியரின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அந்த எண்ணெய்யை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். சமையலறையில் ஈக்கள் அதிகம் இருந்துள்ளன. மேலும், துருப்பிடித்த கதவுகள், சுத்தமற்ற பாத்திரம் கழுவும் பகுதி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் கண்டறியப்பட்டன.
எலி கழிவுகள்
அதேபோல பையர் வாட்டர் பைன் டைனிங் பாரில் நடத்தப்பட்ட ஆய்வில், பொருட்கள் சேமிப்பு அறையில் கரப்பான் பூச்சிகள் காணப்பட்டன. மேலும், பல இடங்களில் எலி கழிவுகளும் இருந்தன. சிக்கன் இறைச்சி முறையாக மூடப்படாமல் நேரடியாக வைக்கப்பட்டிருந்ததும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சமையலறையில் திறந்த நிலையில் குப்பைத்தொட்டிகளும் இருந்தன. மதினகுடாவில் உள்ள இன்னொரு ஹோட்டலில்.. கரப்பான் பூச்சி தொல்லை, எலி கழிவுகள், துருப்பிடித்த பிரிட்ஜ், மூடப்படாமல் வைக்கப்பட்ட சிக்கன் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நடவடிக்கை பாயும்!
மற்றொரு உணவகத்தில், ரெடி செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு லேபிள்கள் ஒட்டப்படாமல் இருந்ததால் அவற்றை அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். வேகவைத்த காய்கறிகள் கழுவும் பகுதிக்கு அருகே தரையில் திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தன. சமையலறையில் எண்ணெய் படிந்த புகை வெளியேற்றும் அமைப்பு இருந்துள்ளது..
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய இந்த உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் செயல்படும் உணவகங்கள் மீது இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications