Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தன்னம்பிக்கையே வெற்றியை தரும்… ஜெ சொன்ன குட்டிக்கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னம்பிக்கைதான் வெற்றியை தரும் என்பதை விளக்க அவர் குட்டிக் கதை ஒன்றையும் கூறினார்.

ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார். தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. எனவே, சந்தோஷமாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு பாலிதின் கவரில் போட்டு, அதை ஒரு துணி கவரில் சீல் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார்.

தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார். ஆனால் அதனை வெளியில் எடுக்கமாட்டார். அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார். பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார்.

பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலைமை. எல்லாம் அந்த துளையிட்ட காசோட மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன.

ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது. அப்போது தன் மனைவியைக் கூப்பிட்டு, ரொம்ப நாளைக்குப் பிறகு என்னுடைய அதிர்ஷ்ட நாணயத்தை இன்றைக்கு வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று கூறினார் அந்த மனிதர்.

உடனே மனைவி, இப்ப அதைப் பார்க்க வேண்டாமே என்று மெதுவாக கூறினார். இல்லை, இல்லை! பார்த்தே தீர வேண்டும்! என்று சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு கவரை திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார்.

அப்பொழுது அவரது மனைவி, உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவில்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று ஜன்னலுக்கு வெளியே உதறினேன். அது தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக வேறு ஒரு நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன் என்று கூறினாள்.

இது எப்ப நடந்தது? என்று கேட்டார் அந்த மனிதர். உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது என்றாள் மனைவி. இதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அந்த மனிதருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி.

வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. ஆசிரியர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, மாணவ-மாணவியரிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தால், அவர்களது ஆற்றல் நிச்சயம் வெளிப்படும்.

ஓவ்வொருவருக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை வெளிக் கொணர வேண்டிய கடமை ஆசிரியர்களாகிய உங்களுக்கு இருக்கிறது என்றார் முதல்வர் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+