காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து கர்நாடக அரசை கவிழ்க்க ரெடி: எதியூரப்பா
ஹூப்ளி: காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கர்நாடக அரசைக் கவிழ்க்க தயாராக உள்ளார் கர்நாடக ஜனதா கட்சி தலைவர் எதியூரப்பா.
பாஜகவில் இருந்து வெளியேறி கர்நாடக ஜனதா கட்சியைத் துவங்கிய எதியூரப்பா ஜெகதீஷ் ஷெட்டர் அரசை கலைக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடகத்தில் பாஜக பதவியில் நீடிக்க அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. பாஜக மற்றும் கர்நாடக ஜனதா கட்சியின் ஆதரவில் தான் ஷெட்டர் அரசு உள்ளது. கர்நாடக அரசைக் கவிழ்க்க விரும்பும் காங்கிரஸுக்கு நான் ஆதரவு அளிப்பேன் என்றார்.
இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடா கூறுகையில், எதியூரப்பா உள்பட சில கறைபடிந்த தலைவர்கள் வெளியேறியுள்ளதால் பாஜக தற்போது சுத்தமாக உள்ளது என்றார்.
தன்னை பாஜக தான் முதல்வராக்கியதே தவிர தனி நபர் யாரும் ஆக்கவில்லை என்று முதல்வர் ஷெட்டர் தெரிவித்துள்ளார். கர்நாடக மக்களுக்கே தெரியும் ஷெட்டரை முதல்வர் ஆக்கியது யார் என்று என எதியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
எனது கட்சி துவக்க விழாவில் மேடையில் இருந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீது தைரியம் இருந்தால் பாஜக தலைவர் நடவடிக்கை எடுக்கட்டும். நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அறிக்கை மட்டும் ஏன் விடுகிறார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications