காவிரி தீர்ப்பு: அரசிதழில் வெளியிட பிரதமரிடம் தி.மு.க., எம்.பி.,க்கள் வேண்டுகோள்

கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை இது வரை மத்திய அரசின் அரசிதழலில் வெளியிடாதது ஏன் என அண்மையில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.கடந்த சிலவாரங்களுக்கு முன்பு நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் கடந்த 15ம் தேதியன்று கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பெங்களூருவில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் முன்னர் தங்களை ஆலோசிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஷெட்டர் பிரதமருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
இதனையடுத்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் இருந்து வலுத்து வருகிறது. இந்த நிலையில் டி.ஆர் பாலு தலைமையிலான திமுக எம்.பிக்கள் இன்று பிரதமரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர்.
ஏற்கனவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications