ஒட்டுமொத்த உறவுக்கும் வேட்டு வைத்த பாக். உள்துறை அமைச்சர் மாலிக்கின் இந்திய பயணம்
டெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் பரம வைரிகளாக இருந்தாலும் ஏதோ கொஞ்சம் நஞ்சம் பேச்சுவார்த்தை என்ற உறவு இருந்து வந்தது. ஆனால் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் இந்திய பயணம் அனைத்துக்கும் வேட்டு வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஜம்மு காஷ்மீர், எல்லைப் பிரச்சனை , தீவிரவாதிகள் விவகாரம், கள்ள நோட்டு புழக்கம், சர் கிரீக் விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இருநாடுகளின் தரப்பிலும் இந்த விவகாரங்களுக்கு தீர்வு காண அவ்வப்போது மாநாடுகள் நடத்தப்படுவதும் பின்னர் காணாமல் போவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு படையெடுத்து வந்த தீவிரவாதிகள் தாக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. ஆனால் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் மும்பை தாக்குதலின் குற்றவாளிகளை ஒப்படைக்கக் கோரும் இந்தியாவின் கோரிக்கையை ஏதாவது ஒரு சாக்கு சொல்லி தட்டிக் கழிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறது பாகிஸ்தான்.
இவை ஒருபுறம் இருக்க இந்தியாவுக்கு 3 நாட்கள் பயணம் என்று வந்துவிட்டுப் போன பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இதுவரை எந்த ஒரு பாகிஸ்தான் தலைவரும் வெளியிடாத படு மோசமான கருத்துகளை இந்திய மண்ணில் இருந்து தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானுக்கும் போய் தெரிவித்து வருகிறார். இந்தியா- பாகிஸ்தான் இடையே இருந்த கொஞ்ச நஞ்ச உறவுக்கு வேட்டு வைத்திருக்கக் கூடிய அளவுக்கு மாலிக் சொன்ன கருத்துகள் என்ன?

ரஹ்மான் மாலிக்கின் இந்திய பயணம்
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கடந்த 14-ந் தேதி இந்தியாவுக்கு வருகை தந்தார். உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை முதல் நாள் சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். இவரது பயணத்தின் இறுதியில் சுஷில்குமார் ஷிண்டேவுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் சம்பிரதாயம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் என்ன?

இந்திய உளவாளிகள்
'மும்பை தாக்குதலில் 3 இந்தியர்களுக்கு தொடர்பிருக்கிறது... அபு ஜிண்டால், பகீம் அன்சாரி, சகாபுதீன் ஆகிய மூவரும் இந்திய உளவாளிகள்" என்று இந்தியாவில் இருந்து கொண்டே முத்து உதிர்த்திருக்கிறார். சவூதி அரேபியாவில் பதுங்கியிருந்தவன் அபு ஜிண்டால். அவன் தான் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப்புக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்தவன். அவனை இந்திய உளவாளி என்று சொல்லி தப்பிக்கப் பார்த்திருக்கிறார் மாலிக்.
மும்பை தாக்குதலைப் பற்றி அவர் இன்னொரு கருத்தையும் சொல்லியிருக்கிறார்...

பாபர் மசூதி இடிப்பு
இந்தியாவின் கறுப்பு நிகழ்வாக கருதப்படுவது பாபர் மசூதி இடிப்பு. இந்த மசூதி இடிப்பில் ஈடுபட்டவர்கள் சங் பரிவாரக் கோஷ்டிகள். ஆனால் மாலிக்கோ, பாபர் மசூதியை இடித்ததும் மும்பை தாக்குதல் சம்பவமும் ஒன்று என்கிற அடிப்படையில் கருத்து தெரிவித்திருக்கிறார். இரண்டும் ஒன்று என்று மாலிக் கூறுவாரேயானால், பாபர் மசூதி இடிப்புக்காகத்தான் மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா அவர்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இன்னொரு சர்ச்சையையும் விதைத்திருக்கிறார்...

கார்கில் போர்
கார்கில் போரின் போது பாகிஸ்தானால் இந்திய தளபதி செளரவ் காலியா சித்ரவதை செய்து கொல்லப்பட்டதை மறைத்து உறைபனியில் சிக்கி உயிரிழந்தார் என்று மாலிக் கருத்தைத் தெரிவித்திருப்பது கடுமையான கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.
இப்படி இந்தியாவுடனான கொஞ்சம் நஞ்சம் உறவுக்கு ஒட்டுமொத்தமாக வேட்டு வைத்துவிட்டு பாகிஸ்தான் மண்ணில் இறங்கிய மாலிக் இன்னும் விஷத்தை கக்கியிருக்கிறார்.

பலுசிஸ்தான் விவகாரம்
இந்தியாவிலிருந்து ஒரு போன் கால் வரும்... அந்த கால் வந்த பின்னர்தான் பலுசிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்று பகிரங்மகாவே சொல்லியிருக்கிறார் மாலிக்...
இப்படியே பாகிஸ்தான் தன்னிச்சையாக தான் தோன்றித்தனமாக செயல்பட்டால் இருதரப்பிலும் சுமூக உறவுக்கு சாத்தியமே இருக்காது!












Click it and Unblock the Notifications