சிங்கள அரசே, காலம் இப்படியே இருக்காது..வைகோ எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: தமிழ் இனத்தையே அழிக்க முற்பட்டுள்ள சிங்கள அரசுக்கு, காலம் இப்படியே இருக்காது. நிலைமை மாறும். சர்வதேச குற்றக்கூண்டில் இக்கொடியோர் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் நாளும் வரத்தான் போகிறது என எச்சரிக்கிறேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பான வைகோவின் அறிக்கை:

தமிழ் ஈழ தாயக உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடி, சிங்கள ராணுவத்தாக்குதலில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த மாவீரர்களுக்கு, அமைதியான முறையில் வீரவணக்கம் செலுத்திய, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை, கடந்த நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் சிங்கள அரசு கைது செய்து கொடிய சிறைகளில் அடைத்து வைத்து சித்ரவதைச் செய்து வருகிறது.

தங்கள் தாயகத்திற்காக களத்தில் போராடிய வீரர்களை மட்டுமல்லாமல், ஆயுதம் ஏந்தாத அப்பாவி பொதுமக்களையும் இலட்சக்கணக்கில் சிங்கள ராஜபக்சேவின் இராணுவம் ஆயுத உதவிகளோடு கொன்று குவித்த கொடுமையின் உண்மையும், ஐ.நா.மன்றம் கடமை தவறி வேடிக்கை பார்த்த அநீதியும், அனைத்துலக சமுதாயத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஆனால், தமிழ் ஈழ மாணவர்களை சிறைப்படுத்தி துன்புறுத்தும் கொடுமை தற்போது உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை. ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகள் மனசாட்சி மறத்துப்போய் மவுனம் கடைபிடிப்பது கண்டனத்திற்கு உரியதாகும். தற்போது தொடர்ந்து மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

சிறையில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கு இராணுவத்தினரும், போலிஸாரும் சென்று மிரட்டி வருகின்றனர். போரினால் தனிமைப்படுத்தப்பட்டு உறவுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்த ஈழத்தமிழ் இளம்பெண்களை, சிங்கள இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று கட்டாயப்படுத்தி, பலவந்தமாக இராணுவத்தில் கொண்டுபோய் சேர்க்கின்ற அக்கிரமம் நடக்கின்றது. அப்படி சேர்க்கப்பட்ட தமிழ்பெண்களை எவரும் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. இப்படி இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்பெண்கள் 21 பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் மனநோய் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஆனால், அவர்களை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஸ்ரீதரன் உட்பட எவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. ஈழத்தில் உள்ள தமிழ் பெண்களின் நிலைமை மிகவும் கவலை தருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்னர் சுன்னாகம் பகுதியில் பல்கலைக்கழக தமிழ் மாணவி மர்மமான முறையில் இறந்துகிடந்ததாக செய்தி வந்துள்ளது.

மொத்தத்தில் ஈழத்தமிழர்களுக்கு கொடுமைகளை திட்டமிட்டு சிங்கள அரசு செய்வதை தடுக்க வேண்டிய இந்திய அரசு, அதற்கு மாறாக சிங்கள அரசோடு தொடர்ந்து பொருளாதார ஒப்பந்தங்களை போட்டும், கடல் வழியாக மின்சாரத்தை இலங்கைக்கு கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முனைந்தும் துரோகம் இழைத்து வருகிறது.

சிங்கள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக சிங்கள அரசு விடுதலை செய்ய மனித உரிமையில் அக்கறை உள்ள நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் சொந்த சகோதர சகோதரிகளுக்கு தொடர்ந்து நேரும் துன்பங்களையும், கொடுமைகளையும் தாய் தமிழகத்து மக்கள் கவனத்திற்கு கொண்டு வருவதோடு, தமிழ் இனத்தையே அழிக்க முற்பட்டுள்ள சிங்கள அரசுக்கு, காலம் இப்படியே இருக்காது. நிலைமை மாறும். சர்வதேச குற்றக்கூண்டில் இக்கொடியோர் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் நாளும் வரத்தான் போகிறது என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+