ரயில் நிலையங்களில் 'புளிச் புளிச்'?, இனி ரூ. 500 அபராதம்… பயணிகள் வரவேற்பு!

ரயில் நிலைய வளாகம், ரயில்வே பிளாட்பாரங்களை, சுத்தமாக வைத்திருக்க ரயில்வே நிர்வாகம், கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, பயணிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், நெடுந்தொலைவு செல்லும் பயணிகள், ரயில் நிலையங்களிலேயே குளிப்பது, சமைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
ரயில் நிலைய பிளாட்பாரங்களில், ரயில்கள் நிற்கும் போது, கழிப்பறையை பயன்படுத்த கூடாது என, அறிவுறுத்தியும், பயணிகள் சிலர் பயன்படுத்துவதால், சுகாதார கேடு ஏற்படுகிறது. இதனால், சில தர்மசங்கடமான சம்பவங்களும் நடந்துள்ளன.இதையெல்லாம் முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ரயில்வே வளாகங்களை சுத்தமாக வைக்கும் வகையில், தற்போது சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ரயில் நிலையங்களில் குப்பை போட்டாலோ, எச்சில் துப்பினாலோ, ரயில்வே சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ, அபராதம் விதிக்கப்படும். மேலும், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் குளிப்பது, சமைப்பது, சிறுநீர் கழிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ரயில்களில், ரயில் நிலைய சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவது, எழுதுவது போன்றவற்றில் ஈடுபடுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என, கடந்த மாதம், 26ம் தேதி அறிவிப்பு வெளியானது. அது, உடனடியாக அமலுக்கு வந்தது; இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரயில் நிலைய மேலாளர்கள் அல்லது அதிகாரிகள் மற்றும் டிக்கெட் கலெக்டர்கள் ஆகியோர் ரயில் நிலைய வளாகங்களில், அபராதம் விதிப்பதற்கு அதிகாரம் பெற்றவர்கள். பிளாட்பாரங்கள் மற்றும் ரயில் வளாகங்களில் கடை வைத்திருப்போர், குப்பைக் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications